Sunday, January 10, 2010

மரணத்திற்கு முன்பே

உனக்கு மட்டும்
தான்
உரிமை உண்டு..
என்
மரணத்திற்கு
முன்பே என்னை
புதைப்பதற்கு..
உன்
இதயத்திற்குள்..

இதயம்

உனக்காக
நான் துடிக்கிறேன்..
ஆனால்
நீ
என்னை தவிர
யார் யாரையோ
நினைக்கிறாய்..

-இப்படிக்கு
 'இதயம்'

உன் நினைவு

நிழல் கூட
என்னை
விட்டு பிரியும்
இரவு நேரத்தில்..
ஆனால்
உன்
நினைவுகள்
என்னை விட்டு
பிரியாது
எந்நேரத்திலும்..

உன் நினைவுகள்

கண்கள் சொக்கும் தூக்கத்தில்..
மூட துடிக்கும் இமைகளுக்கு நடுவில்..
நிற்கிறது உன் நினைவுகள்..

உரிமை

பலருக்கு
விருப்பம் உண்டு
உன்னை
அடைய..
எனக்கு
மட்டுமே
உரிமை உண்டு
உன்னை
காக்க!!!

'ரோஜா' விடம் 'முள்'

தனிமை

தனிமையில்
இருக்க முயற்சிக்கிறேன்.
முடியவில்லை..

என்னுடன்
உன்
நினைவுகள்
இருப்பதால்!

வாழ்க்கை

போகும் போதே
என்னை
ரசித்து
விட்டு போ!
திரும்ப வரமட்டேன்!!
இப்படிக்கு

"வாழ்க்கை"

Tuesday, January 5, 2010

மீண்டும் !!!

அன்று ஒரு அழகிய விடியல்.
சூரியன் தன் ஒளி கைகளை பூமியின் மீது ஏற்கனவே பரவ ஆரம்பித்து விட்ட நேரம்..
நீண்ட நெடும் சாலை... முடிவறியா சாலை.

தார் சாலை தான் என்றாலும் மேடு பள்ளங்கள் இல்லாத பெண்ணின் நேர் நேத்தி போல் நீண்ட நெடும் சாலை.

சோம்பல் தெளியாத மேகங்கள் சூரியன் தடத்தை மறைக்க, ஒளிக்கற்றைகள் ஒற்றை வீச்சுகளாக பூமியை வந்தடைய முயற்சி செய்து கொண்டிருந்தன.

இரு புறமும், தூரிகையெடுத்து பச்சை வர்ணம் தீட்டியது போல் பசும் புல்வெளி.
விடியல் வந்துவிட்டதை உணர்ந்து, கிளம்பிவிட்டன காலை நேர பறவைகள் எல்லாம்.
யாவரும் பயணிக்காத சாலையில் நான் மட்டும்.
அதுவும் BMW - HYBRID காரில், இவை அனைத்தையும் ரசித்தவண்ணம்.
சட்டென்று நிமிர்ந்த நான், சாலை ஓரத்தில் காண்பதென்ன என்று நினைக்கும்
வேளையில்... என் BMW...  க்க்க்க்ர்ர்ர்ரர்ர்ர்ர்ச்சச்ச்... சப்தத்தோடு நின்றுவிட்டது.

நின்றுகொண்டிருப்பது., சற்றே உதிர்ந்த விண் நட்சத்திரத்தை கண்களிலும், உதடுகளில் ரோஜா இதழ்களையும் தாங்கி நிற்கும் ஒரு அழகுப்பதுமை.

அவள் கண்களில் இருந்து மீள்வதற்குள்.... அவளே கூறினாள், அருகில் இருக்கும் கல்லூரிக்கு செல்ல உதவி வேண்டும் என்று.. அதுவும் மிக மெல்லிய நுனி நாக்கு ஆங்கிலத்தில்.
மறுவார்த்தை இன்றி, அவளையும் அமர்த்தியதும், கிளம்பியது என் BMW.

பாரதியின் பாடல்...."காணி நிலம் வேண்டும்.." நினைவு என் ஆழ் மனதில்..!!!

எண்ணங்களால் கிளர்ச்சி அடைத்து கொண்டிருந்தது என் மனம்.
பெயரில் ஆரம்பிக்கலாமா.. அல்லது.......... யோசிக்கும் நேரம்.....

பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...        பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...   பீப்...பீப்...பீப்...பீப்...
அவள் கண்கள் சுருங்க என்னை பார்க்க..!

என்ன இழவு இது.. நேரம் கெட்ட நேரத்தில் இந்த காரில் இருந்து இப்படி ஒரு சத்தம்..??
எப்படி அணைப்பது என்றெண்ணி., கைக்கு கிடைத்த கார் பொத்தான்களை அழுத்த...
பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...        பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...   பீப்...பீப்...பீப்...பீப்...
சத்தம் நின்றபாடில்லை...!

என்ன செய்து சத்தத்தை நிறுத்திதொலைவது..!!!??
பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...        பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...   பீப்...பீப்...பீப்...பீப்...

மறுபடியும் கார் பொத்தான்களை அழுத்த ஆரம்பித்தேன்..!!
பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...        பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...   பீப்...பீப்...பீப்...பீப்...
சத்தம் நின்ற பாடில்லை...!!!

"அர்ரே பாஸ்.... your phone is ringing" என்று அந்த பெண் பேச ஆரம்பிக்க... அதுவும் ஆண் குரலில்... அதுவும் ஹிந்தியில்...!
அட கடவுளே...!

என்னை உலுக்கி எழுப்பிக்கொண்டிருப்பது., என் அறை நண்பன்...!!!
"என்ன உனக்கு இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் தூக்கம் ?
உன் போன் ரிங் ஆகுது பார்...!"
(ஒன்பது மணி தூக்கம்., அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு கனவில் மட்டும் சாத்தியம்..
காரணம்., இங்கு இரவு ஒன்பது மணிக்கு தான் இந்தியாவில் துயில் எழும் பெற்றோர், நண்பன், நண்பிகளிடம் பேசும் நேரம்...!!!)
சலித்துக்கொண்டே எழுந்து., கனவை கலைத்ததற்கு ஆத்திர நன்றி கூறினேன்.

கனவு.. பொய்.. காதல்.. கவிதை.. அழகு...இயற்கை....
இவையெல்லாம் மனித வாழ்கையை அழகாக்கி கொண்டிருப்பது, மடிக்கணினியின் மிதப்பில் இருக்கும் இவனுக்கு எப்படி புரியும் என்றெண்ணி என்னுள் சிரித்தேன்.

நானும் கவிதை எழுதிய காலங்கள் உண்டு..
அதையும் படித்து பாராட்டி தன் காதலிக்கு கொண்டு சென்று அன்பளித்த நண்பர்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறார்கள்...

அந்த கவிதைகளை அரங்கேற்றி., கால சக்கரத்தின் விளைவுகள் என்னவென்றுதான் பார்த்துவிடுமென்றோரு தைரியம்.

"செந்தமிழும் நா பழக்கம்" என்பதாகி., என் வலைத்தளத்தில் கவிதை என்ற போர்வை போத்திய கிறுக்கல்கள் இடம்பெற கண்டிருக்கலாம் நீங்கள்...

சற்றே என் வலை பதிப்புகளை அலங்கரிக்க., சில கவிதைகள் உங்களின் பார்வைக்கும்.

உங்களுக்கு தோன்றியதை., "Comments" பகுதியில் விட்டுசெல்ல மறக்க வேண்டாம்.

மீண்டும் சந்திக்கிறேன்.. கனவுகளோடு அல்ல... அனுபவங்களோடு...

Monday, January 4, 2010

உரிமை

உன்னை பின் தொடரும்
உரிமை என்னை தவிர வேறு யாருக்கும் கிடையாது...
சொல்லி வெய் உன் நிழலிடம்...

நினைவு

இரவு கண்ட
கனவு
மறந்து போகலாம்!
ஆனால்
இதயம் தொட்ட
உன் நினைவு
என்றும் மறக்காது!

Sunday, January 3, 2010

வணக்கம் தமிழினமே !!!


இது என் முதல் தமிழ் வலை பக்கம்.

என்னுடைய நெடு நாளைய ஆசையும் கூட.
என் கனவு என்று கூட சொல்லலாம்..

அனைத்தும் தமிழில் இருந்துவிட்டால் எல்லாமும் எல்லாருக்கும் எளிமை ஆகிவிடும் என்று நண்பர்களிடம் கூறியதுண்டு.
காரணம், என் தாய் தமிழ்நாட்டில் இருக்கும் சாமானியனுக்கும் புரிந்துவிடும் மொழி இது.

ஆயிரம் கோடி ஆண்டுகளாக போற்றி பாதுகாக்கப்பட்ட மொழியும் கூட.
ஆற்று மணலில் ஏழுத ஆரம்பித்து பின்னர் ஓலை சுவடிகளில் அரங்கேறி அதன் பின்னால் காகிதங்களை அலங்கரித்து., இன்று இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டது என் தமிழ்.
உலகில் எவ்வளவு மொழிகளுக்கு இருக்கிறது இந்த அறிய பெருமை ?

பன்பல பரிமாணங்கள் எடுத்தாலும், என்னை பொறுத்த வரை இந்த கணினி பரிணாமம் சாகா வரம் பெற்றது என்பது என் கருத்து.
காரணம், கரையான்கள் அரித்து தின்றுவிடும் அல்லது மழை நீரிலோ, புயல் காற்றிலோ மங்கி    போய் விடும் என்ற கவலை இல்லை..

இப்படி கணினி மயம் ஆக்கப்பட்ட என் தமிழ், உலவ போவது மரண பயம் அறியாத இணையத்தில்.

என் இந்த தமிழ் இணைய தளம் மலர துணையாக இருக்கும் கூகிள்(Google) நிறுவனத்திற்கு என் ஆயிரம் கோடி வணக்கங்கள்.
இந்த இனைய தமிழும் என்னை போல் ஒரு எங்கோ ஒரு கணிபொறி தேர்ந்த இளைஞனின் முயற்சி தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு.

இந்த வலை பக்கத்தை எழுத எழுத என்னுள் ஆயிரம் புறாக்களை சட்டென்று தட்டி பறக்க விட்டதொரு உணர்வு.

இதுவரை என் தாய் தமிழுக்காக நெருப்பில் கரைந்த உயிர்கள் சாந்தம் அடையட்டும்.

ஜப்பானியர்கள் போல் தாய் மொழியில் கல்வி.. தாய் மொழியில் வர்த்தகம்... தாய் மொழியில் மென்பொருள் என்ற நிலை வந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பூரித்து இருக்கிறேன்.

எனக்கு தமிழ் எழுத படிக்க தெரிவித்தது, என் தாய்க்கு பின் என் பள்ளி.. அதன் பின்னர் நான் அதிகம் தெரிந்த தமிழ்., ஆனந்த விகடன் வார இதழில் தான்.
இன்னும் நினைவ்ருக்கிறது சுஜாதாவின் "என் இனிய எந்திரா".
அன்று கண்ட சுஜாதாவின் கனவு வீண் போய்விடவில்லை.
அவர் கனவுகள் இன்றும் உயிரோடு உலா வந்து கொண்டிருக்கிறது.

நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் ஆதாலால் தான் இப்படி ஒரு வலை தளம் என்று எண்ணி விட வேண்டாம்.
ஆங்கில மொழி மேம்பட முக்கிய காரணம் என்று மேல் நாடுகள் கூறும், ஆக்ஸ்போர்டு பல்கலைகலகதில் ஆங்கில புலமைக்கு சிறப்பு பட்டமும் பெற்றிருக்கிறேன்.
நான் கற்ற கணினி ஆங்கிலத்தில் தான்.

நித்தம் படி அளப்பவன் கடவுள்.
அதை போல்  படி அளக்கும் மொழி தான் இன்று எனக்கு ஆங்கிலம்.
"இப்படி தமிழ் இருந்துவிட்டால்"., என்பது என் கனவு.


ஆங்கிலம் என்பது அறிவின் அளவு என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து நெடு நாட்கள் ஆகிவிட்டது தான் கவலை அளிக்கிறது.

உனது இந்த வலை தளத்தால் தமிழ் எங்கும் பறந்து சென்று விடாது என்ற உங்களது   முனுமுனுப்புகள் கேட்க முடிகிறது என்னால்.
இருப்பினும் இது என்னால் முடிந்த முயற்சி.

இந்த வலை தளம் உங்களை கவர்ந்தால், மனதில் இருத்தி திரும்ப சந்தியுங்கள்.
உங்களுகென என்னாலான படைப்புகள் காத்திருக்கும்.

மீண்டும் சந்திப்போம்!