Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு

உலக நாயகன் கமலஹாசன், மாதவன், த்ரிஷா ஒன்றிணைந்திருக்கும் 'ரெட் ஜயன்ட் மூவீஸ்'ன் மன்மதன் அம்பு


சினிமா நடிகை நிஷாவாக த்ரிஷா(சினிமா பெயர் நிஷாவாக, நிஜப்பெயர் அம்புஜாக்ஷி யாகவும்), காதல் கைக்கூடி விரைவில் அவரை கைப்பிடிக்க காத்திருக்கும் சந்தேக நாயகன் மதனகோபலாக மாதவன், மதனகோபாலின் சந்தேகத்தின் விளைவில் முளைத்த துப்பறியும் சாம்பு மேஜர் மன்னார் ஆக கமல்.
படத்தின் பெயர்க் காரணம் புரிந்திருக்குமிந்நேரம்.

மதனகோபாலின் சந்தேக குணத்தால் மனமுடைந்து காதல் துறக்கிறார் நிஷா(எ)அம்பு. துறந்த காதலை மறக்க உல்லாசப் படகில் தன் பள்ளி வயது தோழி தீபாவுடன்(சங்கீதா) உலகம் சுற்ற முடிவெடுக்கிறார். காதலை மறக்க முடியாமல் தவிக்கும் மதனகோபால், அம்புவை வேவு பார்க்க செய்யும் ஏற்ப்பாடு தான் மன்னார். புற்று நோயில் தவிக்கும் நண்பனுக்கு உதவி செய்ய சந்தர்ப்பவசத்தால் அம்புவைப் பற்றி பொய் சொல்லி பணம் சேர்க்கிறார் மன்னார்.

இந்நிலையில் அம்புவிடம் மனம் திறக்கிறார் மன்னார். கோர விபத்தில் தன் மனைவியை தொலைத்த நினைவுகளை கட்டவிழ்க்கும் சமயத்தில் அம்புவுக்கு விதியால் தங்கள் கதைகள் குறுக்கிடுவது புரிகிறது, கூடவே ஒரு இனம் புரியாத ஈர்ப்போடு.

மீதப்படம், அம்பு கைப்பிடித்தது யாரை என்பதே!

கமல்... வழக்கம் மாறாத நடிப்பு.
சிரிப்பு, ஈரக்கண்கள், மிடுக்கு, 'ப்ளேபாய்' த்தனம், எளிமை ஓங்கும் அழகு நடனம். பேஷ்..பேஷ்..

மாதவன். படம் முழுக்க வந்து போகிறார்.
ஏனோ மனதில் நிற்காத நடிப்பு.

த்ரிஷா, அழகு. எதார்த்த நடிப்பு.

கதையின் நடுவில் வந்துபோகும் ரமேஷ் அர்விந்த், ஊர்வசி நிறைவான நடிப்பு.

படம் முழுக்க., பாரிஸ், பார்சிலோனா, வெனிஸ் நகரம் என சுழல்கிறது. மனுஷ் நந்தன்-னின் கேமரா கண்களுக்கு ஒரு சபாஷ்.

கடைசி நாற்ப்பது நிமிடங்கள்... திரைக்கதையை வைத்துக்கொண்டு என்ன செய்யவதென்று தெரியாமல் முழித்திருக்கிறார் கே.ஸ்.ரவிக்குமார்.
சுருக்கமாக, சொதப்பலான திரைக்கதை.

படம் முழுக்க ஆங்கில வாசம். ஆங்கிலத்தின் நடுவே தமிழ் வார்த்தைகள் கேட்கப்பெறலாம். ஒரு மிகத் தாழ்மையான வேண்டுகோள் "என் பாமரன் பேசும் மொழியில், பாமரனுக்கு புரியும் மொழியில் பேசி படம் எடுங்களேன்.. தயவு செய்து"

'நீல வானம்' பாடல் மனதில் நிற்கிறது. படமாக்கப்பட்ட விதமும் புதுமை. 'அட' சொல்ல வைக்கும் உழைப்பு, பின்னோக்கி சுழலும் உலகில் புரிகிறது.
கவிதைப் பாடல் முயற்சி 'பலே'.

Monday, December 6, 2010

மலரே ஒரு வார்த்தை பேசு...இப்படிக்கு பூங்காற்று (பயணக் கட்டுரை) -1

'போதும் இந்த கணினிகள் கக்கும் பீப் சப்தமும், கொதிகொதிக்கும் காற்றும், கைபேசிகளின் அதிர்வும்...'
இந்த எண்ணம் என்னுள் இமியளவு துளிர்த்தாலே.., என் மூளை, தான் சொர்வடைந்துவிட்டதை எனக்கு உணர்த்தும் குறுந்தகவலாக புரிந்துகொள்வேன்.

விடுமுறை எடுக்கும் நேரம் வந்தாகிற்று.

இங்கு(அமெரிக்காவில்) குளிர் காலம் ஆரம்பிக்கும் சமயம். இத்துனை நாட்களாக பூக்கள் கொண்டு அழகு சேர்த்த மரங்கள் எல்லாம், இப்போது பழுத்த இலைகளோடு கண்களுக்கு இதமளிக்க ஆரம்பிக்கும் நேரம்.

நான் மலைக்காதலன், நீர்வீழ்ச்சி ரசிகன், ரீங்காரமிடும் வண்டுகளின் சப்தத்தில் உலகத்தை மறப்பவன், ஆள் அரவமற்ற சாலைகளை கண்டு கவலை துறப்பவன், பச்சைப்பசும் புல்வெளிகளில் காலை நேர மூடுபனி கண்டு மெய் சிலிர்ப்பவன், குருவிகளின் பாடல்களில் காணராகம் கேட்டு மகிழ்பவன், தென்றல் முகத்தை வருடும் சுகத்தை ஒப்பிட வேறொரு சுகமொன்றுமில்லை என்ற எண்ணம் கொண்டவன், நொடிக்கொருமுறை வானத்தின் வண்ணத்தை மாற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகைக்கண்டு வாய்பிளப்பவன், வாகனப்புகையற்ற காற்றை அடர் காடுகளன்றி வேறெங்கு சுவாசிக்க முடியுமென்று வாதிடுபவன்.

இன்னும் கொஞ்சம் தூரம் தாவினால் நீலவான்வெளியை தொட்டு விடலாம் என்ற எண்ணம் மலைகள் மேலன்றி வேறெப்போது தோன்றும். 
மலை உச்சி.... கீழே பார்த்தால் மயிர்க்கூச்செறியும் ஆழ் பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று(தவறி விழுந்துவிடாமல்!) கத்திப்பாருங்கள் 'என்னை வெல்ல யாருமில்லை' என்று., கூட சேர்ந்து சுருதி சேர்க்கும் மலைகளும் 'உங்களை வெல்ல யாருமில்லை' என்று. 
'தன்னை வெல்ல ஆளில்லை இந்த மண்ணுலகில்' என்ற எண்ணத்தோடு நின்றிருக்கும் மலைகளை கீறிக்கொண்டு கொட்டும் நீர்வீழ்ச்சிகளை காணும்போது ஏற்ப்படும் பரவசத்தை வார்த்தைகளில் அடக்குவது கடினம்.

"விடுமுறை" என்றதுமே... என்னை இப்படி ஒரு இடத்திற்கு செல்ல தூண்டியது என் மூளை. இங்கு வந்ததிலிருந்து ஓரிரு முறை கேள்விப்பட்ட இப்படிப்பட்ட இடமொன்று மின்னலாய் தோன்றியது.... 'தி கிரேட் ஸ்மோகீஸ்'(The Great Smokies அல்லது The Great Smoky Mountains, தமிழாக்கம் தடுமாறுவதை உணர்கிறேன் தமிழினமே!)

இணையத்தேடல் தொடங்கினேன்.
மேற்ச்சொன்ன இடத்தின் அழகை குளிர் காலத்தில் பார்ப்பதற்கு கண்கள் இரண்டு போதாதென்றது கூகிள்.
இது போதும்.. தொடங்கினேன் என் பிரயாண ஏற்பாடுகளை.

என் கணினியின் சுட்டிக்கு சுமாராக முப்பது சொடுக்குகளும், எட்டு 'பெஞ்சமின் பிராங்க்ளின்' படம் போட்ட அமெரிக்க ரூபாய் நோட்டுகளும் தேவைப்பட்டது கீழ்க்கண்டவற்றை தயார் செய்ய.,
- சென்று வர விமானப் பயணச்சீட்டு
- மூன்று நாட்கள் காட்டில் தங்கக் குடிலொன்று
- நடக்க முடியா தூரங்களுக்காக கார் ஒன்று

மறுநாள் சாயங்காலம்....
வீட்டிலிருந்து இருபது மைல் தூர கார் பயணத்திற்கு பின், 'சிகாகோ ஒ'ஹேர் விமான நிலையம் உங்களை அன்போடு வரவேற்கிறது.' என்ற எழுத்துப்பலகை, எனக்கு விமானநிலையம் வந்துவிட்டதை உணர்த்தியது.

வெண்ணிற மிளிரல் தரை கொண்டு என்னை உள்வாங்கிக்கொண்டது  ஒ'ஹேர் விமானநிலையம்.
வருடத்திற்கு சுமார் ஆறரை கோடி பயணிகளை கையாளும் அமெரிக்காவின் இரண்டாவது அதிமும்முரமான விமான நிலையம் இது.
இந்த விமான நிலையம் ஒரு நாளைக்கு கொடியசைத்து கட்டுப்படுத்தும் விமானங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐநூறு(2500).. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு நூத்திஐந்து(105) விமானங்கள்.
இரண்டாம் உலகப்போரில் வீர மரணமடைந்த "எட்வர்ட் புட்ச் ஒ'ஹேர்" என்ற விமானியின் ஞாபகார்த்தமாக இந்த பெயர். நாற்ப்பதுகளின் தொடக்கத்தில் இரண்டாம் உலகப்போருக்கு தேவையான விமானங்கள் கட்டும் தளமாக இருந்த இடம், இப்போது பிரும்மாண்ட சர்வதேச விமான நிலையமாக உருமாறி நிற்க்கிறது.

'United Airlines' சார்பாக உங்களை உளமார வரவேற்க்கிறேன் என்றாள் முத்துப்பல் சிரிப்போடு, காலின் பெரும்பகுதி தெரிய குட்டைப்பாவாடை(!) அணிந்த  விமானப்பணிப்பெண் ஒருத்தி.
'நன்றி' என்றேன். அதை வழிமொழிந்து, எனக்கு விமானத்தில் இருக்கை எண்ணளித்து மீண்டும் புன்னகைத்தாள். மறுபடியும் நன்றி கூறி விடைபெற்றேன்.

எத்துனை முறை விமான பயணம் செய்தாலும், ஜன்னலோர இருக்கையைத் தவிர யாதொன்றும் அறியேன் நான்.
காரணங்கள்.,
  • ஒருவேளை அடிக்கடி எழுந்து நடக்கும் பழக்கமுள்ள பக்கத்துக்கு சீட்டவர் கிடைத்துவிட்டால், கவலை ஒன்றும் இல்லை.
  • மேகங்களின் கீழே, மேகங்களினூடே, மேகங்களின் மேலே என நம்மை தாங்கி எழும் இரும்புப்பறவை.. இதை பார்த்து ரசிக்கும் சுகம்..அடடா!
  • நம்மை விட பெரியதாய் ஓங்கி நிற்கும் கட்டிடங்கள், சிறுத்து பொம்மை வீடுகலாவது அழகு
  • இரவு நேரத்தில் நேர் கோடுகளாய், அதை ஊடுரும் கோடுகளாய் தெரு/வீட்டு விளக்குகளின் அணிவகுப்பு பிரபஞ்ச நட்சத்திரங்கள் எல்லாம் தரைக்கு வந்துவிட்டதாக தோன்றுமெனக்கு
  • சூர்யோதயமோ, அஸ்தமனமோ....நிறம் மாறும் வானத்தின் அழகை கண்டு குதூகளிக்கலாம்
  • விமானி விமானத்தை கீழிறக்க, வேகம் குறைக்க, நூத்தியெண்பது கோண வட்டமடிக்க அதன் இறக்கைகளுக்கு தரும் கட்டளைகை காணப்பெறலாம்
அடுத்த இருபது நிமிடங்களில் சிகாகோ நகரம் ஒரு சிறு புள்ளியாக மறைந்தது.

'இன்னும் முப்பது நிமிடங்களில் நாம் தரையிரங்கிவிடலாம்... உங்கள் இரவு நல்லிரவாக மலரட்டும்.. நன்றி' என்றார் விமானி.
                                                                                                                                        ......(தொடரும்)

Sunday, September 26, 2010

கார நம்ம வெச்சிருக்கோம்... கார வெச்சிருந்த சொப்பணசுந்தரிய...

சிகாகோவில் என்னவோ இது வெயில் காலம் தான்...
ஆனால் என் வாழ்வில் இது 'கார்' காலம்..

ஆம்.. கார் வாங்கும் எண்ணம் துளிர்த்து, வேறூன்றி, மரமாகி... நாட்கள்..ஏன் மாதங்கள் பல ஆகியிருந்தாலும்..
ஓட்டுனர் உரிமம் இல்லை(இந்த அனுபவம் என் முந்தைய வலைப்பதிவுகளில் கண்டிருக்கலாம்)
"லட்சுமிதேவியின் வரமேதுமில்லை" என்ற என் புலம்பலுக்கு விடை
... அமெரிக்க அரசாங்கத்திடம் வருமான வரி விவர கோப்புகள் சமர்ப்பிக்கும் நேரம்.

நான் முழு நினைவோடு தான் மேற்கண்ட வரியை எழுதினேன். குழப்பமேதும் வேண்டாம்.

நம் நாட்டிலோ,.. வருமான வரி கணக்கீடு புரிய வைக்க ஒரு தரகர், அவர் தரும் படிவத்தில் எந்த நிற பேனாவில் கையெழுத்திட வேண்டுமென்ற குழப்பம், நேரில் சென்று வருமான வரி அலுவலகத்தில் கணக்கை சேர்க்க திண்டிவனம் வரை நீளும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம்..இவை மட்டும் தான் நினைவிருக்கிறதேனக்கு.

இங்கும் வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய நேரம். நான் எந்த தரகரையும் அணுக வேண்டிய நிலை இல்லை..
அரசாங்கத்திற்கு சொந்தமான வரி வருமான இணையத்தளத்தில் பதிந்து, பதில் சொல்லவேண்டிய விவரங்கள் இதோ...
  • என் பெயர் மற்றும் விலாச விவரங்கள்(குமரன், 1600 பென்சில்வேனியா அவென்யு, வாசிங்டன். என்று எழுத ஆசை தான்...)
  • நான் இங்கு குடியேறிய மாதம்/கிழமை(விரோதி ஆண்டு, புரட்டாசி மாதம், கார் காலம், வெள்ளிக்கிழமை என்று எழுத சொல்லி உந்தியது என் சிறு மூளை..)
  • எனக்கு படியளக்கும் நிறுவனம்
  • நான் வாங்கும் சம்பளம் எவ்வளவென்று, பணிபுரியும் நிறுவனம் தரும் குறியீட்டு எண்
  • சம்பளத்தில் வரியாக பிடிக்கப்படும் தொகை(எவ்வளவோ..ஆனாலும் அது பெரும் பங்கு.. ஹீ ...ஹீ ..)
  • நான் தனி ஆளா அல்லது குடும்பஸ்தனா..(நான் தனி ஆள் தான் ஆனால் தமிழ் நாடே என் பின்னாடி..), எனக்கு இங்கு மாதாமாதம் ஆஹும் செலவு என இன்னபிற கேள்விகள்.
இவ்வளவே... வரி கணக்கு காட்ட நான் செலுத்திய நேரம், 8 மணி சன் செய்தியின் விளம்பர இடைவேளை அவகாசம்.

நான் இந்த விவரங்களை பதிந்த ஒரு வாரத்தில், வருமானவரித்துறையில் இருந்து ஒரு மின்னஞ்சல். 
"உளமார்ந்த வணக்கங்கள்,
நீங்கள் சமர்ப்பித்த வருமான வரி கணக்குகளை சரி பார்த்தாகிற்று, அமெரிக்க அரசாங்கம் உங்களுக்கு அளிக்கவேண்டிய தொகை '$$$$', இந்த தொகை உங்களை வந்து சேர உங்களின் வங்கிக்கணக்கு இலக்கம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்ணை சுழற்றவும். நன்றி"
(என் கண்களின் கருமணிகள், டாலர் ($) ($) உருவமேடுத்தன..)

என் வங்கி கணக்கு விவரங்களை அளித்து மூன்று மணி நேர அவகாசத்தில்,...
"உன் பணம் பணம்.. என் பணம் பணம்... உன் பணம் என் பணம்..."

"இந்த ஊரு என்ன விலைன்னு கேளு!? 
சரி, இந்த தெருவாவது என்ன விலைன்னு கேளு!?
ஐயோ..இப்போ நான் எதையாவது வாங்கியாகனுமேடா!"

கார் தேடல் தொடங்கினேன்.
"புது கார் வாங்கலாம்..." என்ற எண்ணம் கூட தோன்றவில்லை.

இங்கு வாழும் பெரும்பாலானோர், கார்களை ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டும் ஓட்டிவிட்டு அதை விற்றுவிட்டு வேறு கார் வாங்கிவிடுவது வழக்கம்.
காரணம் கேட்டால்,
  • இந்த காரை விட புது மாடல் வந்தாச்சு
  • நான் எந்த காரையும் ஐம்பது ஆயிரம் மைல்கள் அல்லது ஒரு வருடத்துக்கு மேல் ஓட்டுவது கிடையாது
  • பனி காலம் ஆரம்பிக்கும் முன் இன்னும் பெரிய கார் வாங்க போகிறேன்.. அதான்
  • என் முன்னாள் மனைவியின் கார் இது... புது மனைவிக்கு(!) இந்த கார் பிடிக்கவில்லை
  • எங்கள் வீட்டு நாய் குட்டி போட்டிருக்கிறது, ஆதலால் காரில் நிறைய இடம் வேண்டும்
  • சென்ற வாரம் நான் அலுவலகம் செல்லும் வழியில், ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து மோதி முன்புற கண்ணாடியில் ஒரு கீறல் பட்டுவிட்டது
என இது போல் பல நூறு காரணங்கள் உண்டு.

கார்களை ஏமாற்றி விற்ப்பது இங்கு கஷ்டம்.
கார் வாங்கப்பட்ட தேதியிலிருந்து, இந்த நிமிடம் வரை... கார் எத்துனை முறை பழுது பார்க்கப்பட்டிருக்கிறது, ஏன் பழுது பார்க்கப்பட்டிருக்கிறது, விபத்துகளில் இருந்து மீண்டிருக்கிறதா?, திருட்டு வழக்குகள் ஏதும் பதியப்பட்டுல்லதா போன்ற இன்னபிற விவரங்களை அந்த காரின் 'VIN' எனப்படும் பதினேழு இலக்க அடையாள எண் கொண்டு எந்த 'குப்பனும் சுப்பனும்' கண்டுபிடித்து விடலாம்.

நான் 'Honda' காதலன்.
தேட ஆரம்பித்தது 'Honda' கார்களை மட்டும்.

கார் விற்கும் எண்ணமுடையோர், தங்கள் கார் பற்றிய விவரங்கள் முற்றும் காரின் புகைப்படத்துடன் இணையத்தில் பிரசுரித்தவுடன்., கார் வாங்கும் எண்ணமுடையோர் முந்திக்கொண்டு காரை சென்று பார்த்து, ஆராய்ந்து பணம் கொடுத்து வாங்கிவிடுவது.
இதில், செய்ய வேண்டியவை.,
  • வாங்கப்போகும் காரின் சரித்திரம் தெரிந்து
  • காரை ஒட்டி பார்ப்பது
  • காரை ஏன் விற்கிறார்கள் என்ற காரணம்
  • காரை ஒரு மெக்கானிக் கடையில் கொடுத்து பரிசோதனை
தேட ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில், சிக்கியது நான் எதிர்பார்த்த மைல்கள் ஓட்டத்தில்/விலையில் ஒரு 'Honda Civic'.

காரின் சரித்திரம் தெரிந்து கொண்டேன், அடையாள எண் கொண்டு.
சொல்லும்படியான பிரச்சினைகள் ஏதுமில்லை.

சுழற்றினேன் 'கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை'.

'ஹலோ..' என்று அமெரிக்க ஆங்கிலத்தில் எதிர்முனையில் கூவியது ஒரு குயில்.
'கார் விற்பனை நிமித்தம் அழைக்கிறேன், உங்கள் கார் இன்னும் விற்பனைக்குள்ளதா ?' என்றேன்.
'ஒ... அந்த கார் என் பாட்டியுடையது. நீங்கள் இன்று நாலு மணிக்கு இந்த விலாசம் வந்தால் காரை பார்க்கலாம்' என்றது அமெரிக்க குயில்.
'சரி.. உங்கள் விலாசம் ஒரு முறை சரி பார்த்துக்கொள்கிறேன்........ நன்றி'

சரியாக மூன்றே முக்காலுக்கு அந்த விலாசம் சென்றடைந்தோம் நானும் என் அமெரிக்க நண்பரும். 
என்னோடு பணிபுரிபவர் இந்த அமெரிக்க நண்பர்.
எந்த காரையும், அதன் சப்தம் கொண்டு அதில் எத்துனை திருகாணிகள் இறுக்கம் குறைந்திருக்கின்றன என்று கூறிவிடுவார்.

நான் மறுபடியும் அந்த தொலைப்பேசி எண்ணை அழைத்து, நீங்கள் கூறிய விலாசத்திற்கு வந்துவிட்டேன்.. காரை பார்க்க நான் தயார் என்றேன்.

ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் வெளியே வந்து.
'வணக்கம் அன்பர்களே...'
நானும்.. 'வணக்கம், இந்த கார் உங்கள் பாட்டியுடையதா ?' என்றேன்.
அவரும், 'இல்லை.. இல்லை.. நீங்க பேசியது என் பேத்திகிட்ட தான், நான் தான் அந்த பாட்டி' என்றார்.
'அட.. அப்படியா.. உங்கள பார்த்தா பாட்டி மாதிரியே தெரியலீங்க' என்றேன்.
அவர் வெட்க்கம் மல்குவது கண்களில் தெரிந்தது.

இதை கவனித்த என் அமெரிக்க நண்பர், என் காதருகே வந்து.,
'அந்த பெண்ணுக்கு உன் வயதில் ஒரு பேரனோ பேத்தியோ இருக்கக்கூடும்.. இதை உனக்கு யூகிக்க முடியலையா?'
'எல்லாம் தெரியும்.. நான் தமிழன்.. உலகம் அழியும் தருணம் வரை கூட பேசிக்கொண்டு தான் இருப்பேன்.. கார் பேரம் முடியும் வரை இதெல்லாம் கண்டுக்காதீங்க' என்றேன்.

அந்த பெண் குறுக்கிட்டு, 
'நீங்கள் பார்க்க வந்த கார் அதோ அங்கு நிற்கிறது.. சாவி காரில் தான் இருக்கிறது.. ஒட்டி பார்க்க வேண்டுமானால், தாராளமாக சென்று பாருங்கள்' என்றார்.

கருப்பு நிற 'Honda Civic'
'அடடா.... கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...'
கார் ஓட்டம்.. கிட்டதிட்ட மூன்று மைல். 
ஒட்டிய என் நண்பர், பின்னர் காரின் பானட்டில் சிறிது நேரம் ஆராய்ந்துவிட்டு.. 'கார் நல்ல நிலையில் தான் உள்ளது... வாங்கிய பின் செலவேதும் செய்யாமல் ஓட்டலாம்.. அது உறுதி' என்றார்.
நானும் காரை ஒட்டி, 'முடுக்கி, நிறுத்தி, பற்ச்சக்கரம்' இவற்றின் சௌகர்யம் தெரிந்தேன்.

தொடங்கிய இடம் திரும்பினோம், 
'என்ன கார் புடிச்சிருக்கா?' என்றார் அந்த பெண்.
அவரருகே சற்றுமுன் பூத்த குல்மொஹர் பூவொன்று நின்று கொண்டிருந்தது.
'கார் ரொம்ப புடிச்சிருக்கு..' 'இது தான் உங்க பேத்தியா ?' இது நான்.

'ஹாய், நான் தான் உங்களுடன் காலையில் பேசினேன்.. என் பெயர் ஜோவென்' என்று கை குலுக்கினாள்.
சிகப்பிற்கு அடையாளம் சொல்லும் உதடுகள், நீல நிற கண்மணி....
'கை குலுக்கியது போதும்..கையை பிடித்து இத்தோடு இரண்டு நிமிஷம் ஆகிறது' என்று காதை கடித்து, என்னை நிஜ உலகிற்கு கொண்டு வந்தார் என் நண்பர்.
கைகளை விட்டுவிட்டு 'இதெல்லாமா கணக்கு வைத்துக்கொள்வீர்கள்' என்றேன் அவரிடம் வடிவேலு பாணியில்.

'கார் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. விலையை கொஞ்சம் குறைக்க முடிந்தால் ஷேமம்' என்றேன்.

'எவ்வளவுக்கு எதிர்ப்பார்க்கிறீர்கள்' என்றார்.
'நீங்கள் தான் சொந்தக்காரர், நீங்கள் சொல்லுங்கள்' என்றேன்.
'எங்கள் ஊராக இருந்திருந்தால் கை மேல் துண்டை பொட்டு பேரம் பேசி முடித்திருப்போம்' என்று தொடர்ந்தேன்.
'அது என்ன கை மேல் துண்டை பொட்டு பேரம் பேசுவது... எப்படி என்று விளக்குங்கள்' என்றார் பாட்டி(!).
'விளக்க நான் தயார், எங்கள் ஊர் வழக்கப்படி பேரம் பேசுபவருக்கு பேத்தி இருந்தால்., பேத்தியிடம் தான் அப்படி பேரம் பேச வேண்டும்' என்றேன் குறும்பு சிரிப்புடன்.
'You silly' என்று சிரித்தாள் ஜோவென்.

'நீ எதற்கு அடி போடுகிறாய் என்று புரிகிறது, சீக்கிரம் விலையை பேசு...' என்றார் என் நண்பர்.

கடைசியாக நான் கூறிய விலைக்கு ஒத்துக்கொண்ட பாட்டிக்கு நன்றி கூறி, மற்றுமொரு முறை ஜோவென் கைகளை குலுக்கி(ஹீ...ஹீ...), காரை வாங்கி வந்தேன்.

சிறகுகள் முளைத்து விட்டதொரு பரபரப்பு.
என் வீடு நோக்கி முப்பது மைல் தூர பயணம் என் முன்னால்.
மேற்க்கே மறைந்து கொண்டிருந்தது சூரியன்... இரு புறமும் தூரிகை வைத்து தீட்டியதை போன்ற புல்வெளி... இரவு நெருங்குவதை புரிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தன கொக்குகள்.. கொஞ்சம் எதிரே..சாலையோரம்... முகத்தினூடே முடி களைய பெண்னொருத்தி... இந்த முறை..கனவல்ல.

சந்திப்போம்.....N

Saturday, August 28, 2010

மதராசபட்டினம்

காதல்..காதல்..காதல் இல்லையேல் சாதல்...
நம்ம அழகூர் மதராஸ்..
டைடானிக் பாணி காதல் கதை.
சுதந்திர இந்தியா பிறக்கும் சமயம்..
அங்குலம் அங்குலமாக ரசித்து படமாக்கியிருக்கிறார்கள்.

சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தலாம்.,
அட! சொல்ல வைக்கும் அழகு யார்?
ஏமி ஜாக்சன்-ஆ? இல்லை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த சென்னைப்பட்டினமா ? என்று.

ஏமி ஜாக்சன், அழகில் பேசுகிறார்.. அழகாக பேசுகிறார்...
கண்களில் அழகு.. உதட்டில் அழகு... சிரிப்பில் அழகு... தமிழ் பேசுவதில் அழகு...
அடடா... அழகோ அழகு...
தமிழ் சினிமா உலகில் வெற்றி வலம் வரப்போவது உறுதி.

ஆர்யா, யதார்த்த நடிப்பு. காதல் வயப்படுவதில், வீரம் கொந்தளிப்பதில்.
சபாஷ் சொல்லவைக்கிறார்.

ஹனீபா, நாசர் படத்திற்க்கு பலம் சேர்க்கிறார்கள்.

இப்படியா இருந்தது நம் சென்னை, என காட்சிகளில் வியக்கவைத்திருக்கிறார்கள்.

"பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே...." பாடல், மனதை மயிலிறகால் வருடுகிறது.

பாராட்ட வேண்டிய முயற்சி.

Monday, August 23, 2010

பதினொன்னு போட்டு காட்டு... (தொடர்ச்சி)

நான் என் முந்தைய வலைப்பதிவுகளில் கூறியிருந்ததைப்போல், இங்கு(அமெரிக்க வாழ்க்கை வாழ..) கார் இல்லா மனிதனுக்கும் கால் இல்லா மனிதனுக்கும் பெரும் வித்யாசமில்லை..

கார் ஓட்டுனர் உரிமம் பெறுவதென்று முடிவு செய்தேன்.
கார் ஓட்டுகிறோமோ இல்லையோ, மொத்தத்தில் இந்த உரிமம் இங்கு அடையாள அட்டை போன்ற ஒன்று.

கார் ஓட்டுனர் உரிமம் நம் பிறந்த தேதி தாங்கி நிற்கும்.

இந்த நாட்டில் சட்டங்கள் அந்த மாதிரி.
அண்மையில் நடந்த சம்பவமொன்று நினைவிற்கு வருகிறதெனக்கு., இங்கு நான் புதிதாக ஒரு வீட்டில் குடியேறிய சமயம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். தேவையான பொருட்களை தேர்வு செய்த பின்னர்., பணம் செலுத்துமிடத்தில் ஜீன்ஸ் பாண்ட் அணிந்த சிகப்பு உதட்டுக்காரி ஒருத்தி "நீங்கள் இந்த கத்தியை வாங்கவேண்டுமானால் நான் உங்கள் அடையாள அட்டையை பார்க்க வேண்டும்" என்றாள்.
அர்த்தம் விளங்காமல் நெற்றி சுருக்கினேன்
அதற்க்கு அவள் "பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கூர்மையான உபகரணங்கள் விற்பதற்கு இந்த மாநிலத்தில் தடை" என்றாள்.
'அடடா... என் பெயர்க் காரணம் எப்படி புரிந்தது இந்த வெள்ளைத்தோல்காரிக்கு' என்ற மனதில் சிரித்துக்கொண்டே..' அப்படி ஏதும் என்னிடம் இல்லை பெண்ணே!" என்றேன்.
"மன்னிக்கவும் அன்பரே, உங்களுக்கு இதை விற்றால் நான் வேலை இழக்கக்கூடும்" இது அவள்.
"கத்தியை தவிர மற்றவைக்கு ரசீது போடுங்கள்" என்றேன் புன்சிரிப்புடன்.

இதைப்போல் பல நூறு சட்டங்கள் உண்டு இங்கு, வயதுக்கேற்ற பண்டம் விற்பனைக்கு.
தலைவலி மாத்திரை வாங்கவேண்டுமானால் கூட, "வயதென்ன?, அதற்க்கு அத்தாட்சி என்ன?" என்ற கேள்விகளுக்கு பின் தான் ஏதும் நடக்கும்.

இணையத்தில் உலாவி, இங்கு ஓட்டுனர் உரிமம் பெற என்ன ஆவணங்கள் தேவை என்று தெரிந்துகொண்டேன். கூடவே எந்த அலுவலகம் செல்ல வேண்டும் மற்றும் எவ்வளவு தூரமென்றும்.

ஓட்டுனர் உரிமம் பெற : நான் வேற்று நாட்டவன் என்பதால்., நம் நாட்டின் கடவுச்சீட்டு, நான் இங்கு வேலை செய்யத் தான் வந்திருக்கிறேன் என்பற்கான அத்தாட்சி(பிறகென்ன அமெரிக்க பழங்குடியினத்தவரின் பாடல்கள் கற்று போகவா வந்தேன்!), என் இருப்பிட விலாசம் மற்றும் இருபது டாலர் அரசாங்க கட்டணம்..... இவையெல்லாம் அத்தியாவசியமாம்.
மேற்க்கண்டவை மட்டுமல்லாமல்., வாகன/சாலை சட்டம் பற்றிய எழுத்துத் தேர்வில் எண்பத்திஐந்து சதவிகிதம் பெற்று தேர்ச்சி, குறைந்தபட்சம் ஐந்து மைல் தூரம் சாலை விதிகளை மதித்து கார் ஒட்டி காட்ட வேண்டும் ஒரு அரசாங்க அதிகாரியிடம்(நம் ஊர் R.T.O போல்)

என் அமெரிக்க நண்பர்கள் பெரும்பாலானோர்., "அரசாங்க அலுவலகத்திற்க்குச் செல்கிறாய், எட்டு மணிக்கு அலுவலகம் ஆரம்பிக்கும் சமயம் அங்கு இருப்பது உசிதம்" என்று பயமூட்டினர்.

'அடடா.. என்ன கொடுமை சார் இது'

நான் செல்ல முடிவு செய்த நாள், சனிக்கிழமை.
சனி நீராடிவிட்டு காலை ஏழு மணிக்கெல்லாம் ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகம் சென்று சேர்ந்தேன். எனக்கு முன்னரே இருபது பேர் அந்த அலுவலகம் முன், அழகான நேர் வரிசையில் காத்திருந்தனர்.

மணி 7.45 : அலுவலகத்தினுள் இருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் வெளியே வந்து "எல்லோருக்கும் எங்கள் இனிய காலை வணக்கங்கள்! உங்களை இந்த அலுவலகத்திற்கு அன்போடு வரவேற்கிறோம். இன்னும் பதினைந்து நிமிடங்களில் இந்த அலுவலகம் திறக்கப்படும். ஓட்டுனர் உரிமம் பெற வந்துள்லோர் இந்த கதவின் வலது புறமும், மற்ற அரசாங்க காரியங்களுக்கு வந்திருப்போர் கதவுன் இடது புறமும் நிற்கவும்.(சித்தெறும்புகளைப்போல் சட்டென நகர்ந்து அவள் சொன்னதை செய்தனர் அனைவரும்..நானும் தான்.. அலையில் சிக்கிய இலையைப்போல்)
மேலும் அலுவலகத்தினுள் உணவுப் பண்டங்களுக்கு அனுமதி இல்லை.
இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்" என்று சொன்னதோடு புன்னகையும் சிந்திவிட்டு, கேள்விகளோடு காத்திருப்போருக்கு பதில் கூறிக்கொண்டிருந்தாள்.

வரிசையில் நிற்கும் மக்கள் மத்தியில் எந்த சண்டையும் இல்லை..யார் முதலில் நகர்ந்து செல்ல வேண்டுமென்ற குழப்பம் ஏதும் இல்லாமல் நகர்ந்தனர்.

மணி 8.00 : அலுவலகம் திறக்கப்படுகிறது.
அலுவலகத்தினுள் நுழைந்ததும், குளிர்காற்று என் முகத்தை அணைத்து வரவேற்றது. தாஜ் கோரமென்டலினுள் நுழைந்ததாக நினைத்துக்கொண்டிருந்த என் மூளையை சரிசெய்துகொள்ள., என் நாக்கை ஒரு முறை நானே கடித்து இது கனவல்ல என்றும் உறுதி செய்தேன்.

மணி 8.05 : என் வரிசையில் நான் ஆறாவதாக...என் முறை வந்ததும் என் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. "குமரன், தங்களது ஆவணங்கள் சரி பார்தாகிற்று, நீங்கள் செல்லவேண்டிய செயலறை எண் ஆறு" என்றது சிகப்பு உடையில் இருந்த பைங்கிளி(!) ஒன்று.

மணி 8.15 : இடம் : செயலறை எண் ஆறு., "காலை வணக்கம், தாங்கள் இங்கு வந்த நோக்கம்?" என்றார் ஒரு அரசாங்க அதிகாரி. மூலிகை பெட்ரோல் தயாரித்து அமெரிக்கா முழுதும் விற்பனை செய்ய, உரிமம் பெற வந்தேன் என்று சொல்ல எண்ணி "ஓட்டுனர் உரிமம்" என்றேன் புன்னகையுடன். நான் கொண்டு சென்றிருந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு, இன்னபிற ஆவணங்களில் என்னிடம் மூன்று முறை கையெழுத்து பெற்றார்.
கவுண்டமணி பாணியில்., 'சார், எங்க ஊர் முக்கியமான பேப்பர்ஸ் ஏதும் உள்ளே வெக்கலயே..' என்று மனதில் எண்ணம்.

"மிஸ்டர் குமரன், உங்கள் வலது பேரு விரல் ரேகை வேண்டும், தயவுசெய்து அந்த ஒளிப்பலகையில் உங்கள் வலது கை பெருவிரலைப் பதியுங்கள்" என்றார்.
மயிலிறகின் ஸ்ப்ரிசம் போதும் அந்த இயந்திரத்திற்கு, என் பேரு விரலை பதித்தவுடன் அதை உள் வாங்கிக்கொண்டு 'பீப்' சப்தமிட்டது.

"மிஸ்டர் குமரன்., நீங்கள் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடி, உங்களின் பார்வை திருத்தத்திற்க்கா(?) அல்லது உங்களின் முக பாவனைக்காகவா ?" என்றார் அவர்.
'முக பாவனை மாற்ற நான் என்ன தசாவதாரம் கமலஹாசனா ?' சிரிப்புடன் "பார்வை திருத்தம் தான் காரணம்" என்றேன்
"உங்கள் இரு கண்களாலும் உங்களின் வலது கைப்பக்கமுள்ள அந்த கருப்பு பெட்டகதினுள் பாருங்கள்" என்றார்... அந்த பெட்டகதினுள் இருந்த திரையில் தெரிந்த பறக்கும் பலூனை பார்த்த மாத்திரத்தில் 'பீப்..பீப்..' என்றது என்றது அந்த இயந்திரம். அந்த இயந்திரம் கூறிய என் கண்பார்வை குறியீடுகளை குறித்துக்கொண்டதுடன்,

"நீங்கள் அடுத்து நேரே சென்று காசாளரிடம் உங்கள் கட்டணத்தை கட்டிவிடுங்கள்" என்றார்.

மணி 8.28 : இடம் : காசாளர் கூடம்., இருபது டாலர் நோட்டை(மட்டுமே!) அவரிடம் நீட்டியதுமே, இயந்திரம் கக்கிய ரசீதை என்னிடம் நீட்டினார்.

மணி 8.31 : இடம் : பரீட்சைக் கூடம்.,
'என்ன பெரிய பரீட்சை., SSLC, ப்ளஸ் 2 என வாழ்க்கை தடத்தையே மாற்றும் பரீட்சைகள் எழுதியாகிற்று.. இன்னுமென்ன பயம்' என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்தாலும், அபார நம்பிக்கையின் விளைவால் ஏதும் சொதப்பல் நடந்துவிடுமோ என்ற பயமும் தான்.
சாலையின் குறியீடுகள், வாகனத்தை கையாளும் விதம், பாதுகாப்பு சட்டங்கள் என ஒரு வாகன ஓட்டுனருக்கு இருக்கவேண்டிய இயல்பறிவை சோதிக்கும் பரீட்சை.

மணி 8.35 : இடம் : பரீட்சைப் பேப்பர் திருத்துமிடம்.,
எழுதி முடித்த பரீட்சைத் தாளை மற்றுமொரு அரசாங்க அதிகாரி வாங்கிச் சென்றார். பதில்களை என் எதிரிலேயே(!) சரி பார்க்க ஆரம்பித்தார்.
'ஒரு வேலை நம்மிடம் சம்திங் ஏதிர்பார்ப்பாரோ..'  தமிழனின் மூளை(!).
 குறும் புன்னகையுடன் "நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்... நேரே சென்று நீங்கள் ஒட்டி காட்டப்போகும் காருடன், அலுவலகத்தின் பின்புறம் வந்துவிடுங்கள். மற்றுமொரு அரசாங்க அதிகாரி அங்கு உங்களை சந்திப்பார்" என்றார்...
'ஆத்தா....நான் பாஸ் ஆகிட்டேன்' 


மணி 8.40 : இடம் : அலுவலகத்தின் பின்புறம்.
நான் வாடகைக்கு கொண்டு சென்றிருந்த காரில் காத்திருக்க., உதடுகளில் 'Elle 18' தாங்கி வந்த பாவையொருத்தி காரில் இருத்த ஒளி/ஒலி-ப்பான்களை சரி பார்க்கும் மும்முரத்தில்.


மணி 8.43 : இடம் : வாடகை காரின் ஓட்டுனர் இருக்கையில்.
காற்றோடு மிதந்து வந்து காரில் ஏறிக்கொண்டாள் நடுத்தர வயது பெண்னொருத்தி. "குமரன், என் பெயர் Jackie. உங்கள் வாகன ஓட்டும் திறமையை பரிசோதிக்க போகிறேன் நான். நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்"
'பேசியே ராஜ்யத்தை வெல்லும் தமிழ்க் குடியில் பிறந்தவன் நான், அது முடியாதம்மா என்னால்'


மணி 8.45 : இடம் : போக்குவரத்து அம்மும் சாலை
வலது பக்கம் திரும்பு, இடது பக்கம் திரும்பு, பின்னோக்கி செல், குறிப்பிட வேகத்தில் செல், சாலையோரம் வாகனத்தை இறுதி, பள்ளி வளாகம் நெருங்கினால் என்ன வேகத்தில் செல்ல வேண்டும்....என்று சுமார் எட்டு மைல் தூரம் எனக்கு கட்டளைகள் இட்டு வந்தாள். 
நான் - பொம்மலாட்ட பொம்மையை என்று சொன்னாலும் மிகையாகாது.
நான் செய்கிற தவறு/சரி எல்லாவற்றையும் குறித்துக்கொண்டும் வந்தாள்.
'சம்திங் பற்றி பேச இது தான் சரியான சமயம் என்றது என் சாத்தான் மூளை'
'வேண்டாம் பொறு' என்றது சுயசிந்தனை.


மணி 9.15  : இடம் : அலுவலகத்தின் பின்புறம்(ஓட்டும் பரீட்சை ஆரம்பித்த இடம்!)
தான் வைத்திருந்த படிவத்தில் கையெழுத்திட்டு, என்னிடம் திரும்பி "நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்" என்றாள்.
வெற்றி....வெற்றி... வெற்றி வேல்... வீர வேல்..


மணி 9.20  : இடம் : ஓட்டுனர் உரிமதிற்க்கு புகைப்படமெடுக்குமிடம்.
"கொஞ்சம் சிரியுங்களேன்" என்று சிணுங்கியது ஜீன்ஸ் அணிந்த பைங்கிளி ஒன்று.
"புகைப்படம் முடிந்தாகிற்று, உங்கள் முன்னாலுள்ள ஓளிப்பேழையில் கையெழுத்திடுங்கள்" என்று மீண்டும் சிணுங்கல்.
மணலில் எழுதிய விரல்களுக்கு.. ஓளிப்பேழையின் வழவழப்பு பிடிபடவில்லை...

"கையெழுத்து சரியாக வந்ததாக தோன்றவில்லை பெண்ணே..
என்னை மீண்டும் கையெழுத்திட அனுமதித்தால்..
உன் உதட்டழகை வர்ணித்து கவிதை எழுதி சலவைக்கல்லில் பதித்து, அதை நிலவில் கொண்டு சேர்க்கிறேன்.."


சிரிப்பைச் சிந்திவிட்டு "சரி..." என்றாள்.


மணி 9.25  :  "மிஸ்டர் குமரன், உங்கள் ஓட்டுனர் உரிமம் தயார். உங்கள் பயணங்கள் இனிதாக அமையட்டும்".
"நன்றி" இது நான்.

சுயஅறிவு/வாகன கையாளும் முறை தேர்வு..
கண் பரிசோதனை..
வார்த்தைக்கு வார்த்தைக்கு மரியாதையுடன் பேசும் அலுவலர்கள்..
அதட்ட யாருமில்லாவிட்டாலும் மக்களிடையே இருந்த ஒழுங்கு முறை..
சற்று முன் சலவை செய்து எடுத்ததைப்போன்ற அலுவலகம்..
தேவையான ஆவணங்கள்..
இடைத்தரகர்கள் இல்லாத இரண்டரை மணி நேரம்.
அரசாங்க கட்டணம் மட்டும்..
...இவை மட்டுமே நினைவில்.

என்று வரும் நம் நாட்டில் இந்த நிலை ??

சந்திப்போம்.....N

Friday, August 13, 2010

இதயம்

காதலிப்பது
யாராக
இருந்தாலும் !!
கஷ்டபடுவது
நான்
மட்டுமே !!

இப்படிக்கு
இதயம் :-)

நிமிடம்

எனக்கு
மட்டுமே
சொந்தம்
என்று
எதையும்
நான்
நினைத்தது
இல்லை இன்றுவரை..
உன் அன்பு
கிடைத்த
அந்த
நிமிடம்
வரை..

சுமை

விழிகளும்
சுமை தான்..
உன்னை பார்க்காமல்
ஏங்கும் நாட்களிலெல்லாம்..

புரிதல்

உன்னை
பார்க்க
அடம்பிடிக்கும்
என்
கண்களுக்கு
எப்படி
புரிய வெய்பேன்
நீ
என்
இதயத்தில்
இருக்கிறாய்
என்று..

Saturday, July 31, 2010

உன் நினைவுகள்

துடிக்க
மட்டுமே
தெரிந்த
என்
இதயத்துக்கு
தவிக்கவும்
கற்று
கொடுத்தது
உன்
நினைவுகள்..

Wednesday, July 28, 2010

ரணம் சுகம்

"காதல் சொல்லு..
கிட்ட வந்து காதுல சொல்லு...
கண்ணுல சொல்லு...
கவிதையா பேச்சுல சொல்லு...."

"ரணம் சுகம்" பாடல்கள் தான் இந்த வாரம் முழுதும் என் காலை நேர காபியில் இனிப்பை கலந்துகொண்டிருக்கிறது.

ரம்மியமான இசை, மனதைவருடும் பாடல் வரிகள்.. உண்மையில் பாராட்ட வெண்டிய முயற்சி.

கதை நாவல்., அதோடு இணைந்து ஒன்பது பாடல்கள்.
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்.... பிரமாதம்


கீழிருக்கும் இணைய முகவரி கொண்டு பாடல்கள் வாங்கலாம்.
http://www.ranamsugam.com/index.php

பாடல்கள் கேட்க ஏதுவாக்கிய நட்பு வட்டாரதிற்கு சிறப்பு நன்றி.
சந்திப்போம்.....N

Sunday, July 25, 2010

நீ...

உயிருடன் ஒப்பிட
முடியவில்லை
உன்னை..
ஏன் என்றால்
உயிரும்
ஒரு நாள்
பிரிந்துவிடும்
என்பதால்!

Friday, June 25, 2010

பதினொன்னு போட்டு காட்டு...

அழுதுவடியும் அழுக்குப்படிந்த பழைய கட்டிடம்.. அல்லது சற்றுமுன் கலெக்டர்/மந்திரியால் திறந்து வைக்கப்பட்ட புத்தம் புதிய, ஆனாலும் விரைவில் அழுக்குப்படியப்போகும் வெள்ளை வெளேர் கட்டிடம்.

எவ்வளவு புதிதாக இருப்பினும்., அந்த கட்டிடங்களின் பெரும்பாலான தூண்கள் ஏற்கனவே சிகப்பு பாவாடை கட்டி இருப்பதை காணலாம். உபயம் : போது இடங்களில் வெற்றிலை மென்று துப்புவோர் சங்கம்.

கட்டிடத்தின் சுவரிலோ அல்லது அதை சுற்றி அமைந்துள்ள மதில் சுவரிலோ(!) 'நோட்டீஸ் ஒட்டாதீர்கள்' என்ற எச்சரிக்கையின் மேல் தேர்தல் பிரச்சார விளம்பரமோ, சினிமா விளம்பரங்களோ குடிகொண்டிருக்கும்.

கட்டிடத்தின் தென்மூலை, வடமூலை, சனிமூலை, ஈசான்யமூலை என எந்த மூலையையும் விடாமல், மூங்கில் தடுப்புகள் கட்டி அதை வாகனங்கள் நிறுத்துமிடமாக்கி பணம் வசூலிக்கும் கூட்டம்.

தட்டச்சு இயந்திரம்/மடிக்கணிணி சகிதமாக கட்டிடத்தின் முன் இருபுறமும் அமர்ந்து தன் வேலைகளை கவனித்தும், மீதமுள்ள புலன்களால் நம்மை ஊடு கதிர்படமேடுக்கும் 'உடனடி தரகர்கள்' கூட்டம். இவர்களன்றி அரசாங்க அலுவலகத்தினுள் ஓரணுவையும் அசைக்க எந்த ஒரு இந்திய குடியுரிமை பெற்ற சாமானியனாலும் முடியாதென்பது இவர்களது எண்ணம்...இது உண்மை இல்லை என்று மறுக்க நாமில் பெரும்பாலானோர்க்கு முடியாது.

கட்டிடத்தினுள் நுழைந்ததுமே நாம் என்ன காரியத்திற்காக வந்திருக்கிறோம் என்பதையும் நம்மிடம் எவ்வளவு பணம் அன்பளிப்பாக(!!) வாங்கலாம் என்று நம் முகம்/நடை/உடை பாவனைகளை வைத்து ஆரூடகம் செய்யும் 'அரசாங்க அலுவலர்' கூட்டம்.

கத்தை கத்தையாக கோப்புகள், ஏற்கனவே தன் பாதியை மூட்டைபூச்சிகள் விழுங்கிவிட்டதை உணர்ந்திருக்கும் மேசை நாற்காலிகள், மழைக்கால விளைவாக கண்ணீர் விட்டும் விரிசல் கண்டும் நிற்கும் சுவர்கள், ராஜராஜ சோழன் காலத்திலிருந்து இந்த அலுவலகங்களில் தங்கள் குடும்பத்தை விருத்தி செய்து கொண்டிருக்கும் சிலந்திகள்.... இவையெல்லாம் அரசாங்க அலுவலகத்தின் அடையாளமாக கண்டு வளர்ந்தவன் நான்.

கண்டிப்பாக., பெருமாள், செந்தில், மணிகண்டன் என பெயர்கள் கொண்ட அரசாங்க அலுவலர்களில் ஒருவரேனும்.. அடுத்தமுறை கவனித்துப்பாருங்கள் மேஜை மேலுள்ள பெயர் பலகைகளை...
ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன... என ஒவ்வொரு மேசைக்கும் டீ, காப்பி விநியோகிக்கும் டீ கடை சிறுவர்கள்..
நேற்றைய 'தங்கம்', 'தென்றல்' மெகா சீரியல் விமர்சனங்கள் காதுக்கு எட்டும் தூரத்திலிருக்கும் பெண் அலுவலர்களிடமிருந்து.

ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் அலுவலக வேலைக்கு., பதினோரு மணிக்கு வந்ததையே லிம்கா சாதனைகளில் பதியவேண்டிய நிகழ்வாக நினைத்து பேசும் கூட்டம் ஒரு பக்கம், நாசாவில் தலைமை விண்வெளி ஆராய்ச்சியாளராக இருந்து, பால்வெளி நட்சத்திரங்களை சுற்றி இனம் புரியாமல் தோன்றும் கருப்பு வட்டங்களை பற்றிய ஆராய்ச்சியை தமிழக அரசாங்க வேலை நிமித்தம் கைவிட்டுவிட்டு வந்துவிட்ட ஒரு தோரணையோடு உலா வந்து கொண்டிருக்கும் அலுவலர்கள் ஏராளம்.

எல்லாமிருக்கட்டும், நாம் அந்த அலுவலகத்திற்க்கு வந்த வேலை என்ன என்பதை மட்டும் சுருங்கசொல்லிவிட்டால் போதும்.. அது அப்துல் கலாம் - முன்னாள் இந்திய ஜனாதிபதி என்ற பெயரில் ஓட்டுனர் உரிமம் வேண்டுமானாலும் சரி(!)., அதற்க்கு யாருக்கு எவ்வளவு அன்பளிப்பு(!) கொடுக்க வேண்டும் என்ற பட்டியலுடன் தயாராக இருப்பர் சித்திரகுப்தனாக அங்கிருக்கும் ப்யூன்கள்.

இந்த அனுபவங்கள் நம்மில் பலருக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது நடந்திருக்கும்.

கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் என்பதில் ஆரம்பித்து மின் கட்டணம் கட்டுவது வரை பொதுவாக எல்லாவற்றுக்கும் இதே நிலை தான் நம் நாட்டில்.
உதாரணதிற்க்கு, ஓட்டுனர் உரிமம் பெற அரசாங்கத்திற்க்கு செலுத்தவேண்டிய கட்டணம் எவ்வளவு கேட்டால் நம்மில் பெரும்பாலனோர்க்கு கண்டிப்பாக தெரியாது... காரணம்..
இது தன்னிலை விளக்கம் கொண்ட வாக்கியம். காரண விளக்கம் தேவையிறாது என்று நினைக்கிறேன்(!).

"கட்டணம் மட்டும் தான் செலுத்துவேன்... அன்பளிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கு..." என்று அரசு அதிகாரிகளிடம் வீம்பு பேசினால், கண்டிப்பாக எட்டு போடுவதற்கு பதிலாக பதினொன்று பொட்டு காட்டிவிட்டு தான் ஓட்டுனர் உரிமம் வாங்க முடியும் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

இதைப் போன்ற அனுபவங்களில் வாழ்ந்து பழகிய எனக்கு, வரப்போகும் அனுபவ அலைகள் சற்றே பரவசமூட்டுபவை என்று சொன்னாலும் அது மிகையாகாது........

அனுபவ அலைகளோடு மீண்டும் சந்திக்கிறேன்.....N

Friday, June 11, 2010

சிங்கம் - மசாலா கர்ஜனை

பிக் பிக்சர்ஸ் - ஸ்டுடியோ கிரீன் இணைந்து K. E. ஞானவேல் ராஜா தயாரிக்க.,
'ஆறு' வெற்றிக்கு பின் மீண்டும் ஒன்றிணைந்திருக்கும் சூர்யா - ஹரி கூட்டணியில்,
சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது - சிங்கம்

நாலு வரிக் கதையோ, நாற்பது வரிக் கதையோ...
இது வரை தமிழ் சினிமா பார்த்திராத கதையோ, பார்த்து சலித்துவிட்ட கதையோ..
மொத்தத்தில் வேண்டியது, எல்லா தர பார்வையாளர்களையும் இருக்கையில் இருத்த தேவையான அம்சங்கள். இந்த அம்சங்களில், பெரும்பாலானவற்றை தன்னுள் வாங்கி ரசிகர்களிடையே கம்பீர நடையோடு - சிங்கம்


தூத்துக்குடி மாவட்டம் நல்லூர் கிராமத்தில் சுழல ஆரம்பிக்கிறது கதை. தந்தை சொல் கேட்டு காவல்துறையில் தன் சொந்த ஊரிலேயே சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார் துரைசிங்கம்(சூர்யா)(படத்தின் பெயர்க் காரணத்தை இவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பதை சற்றும் தவிர்க்க இயலவில்லை). பஞ்சாயத்து, சோம்பு, ஆலமரம் இவையேதுமில்லாமல் FIR, கோர்ட், கேஸ் என்றில்லாமல் ஊர் பிரச்சினைகளை தீர்த்தும் வைக்கிறார்.
விடுமுறைக்கு நல்லூரில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு வரும் காவ்யா(அனுஷ்கா)வை சந்தித்து காதல் வயப்படுகிறார் துரைசிங்கம்.
பிரபல சென்னை கட்டப்பஞ்சாயத்து தாதா மயில்வாகனம்(பிரகாஷ் ராஜ்), கோர்ட் உத்தரவின் பேரில் நல்லூர் வரநேர்ந்து, துரைசிங்கத்திடம் மோதல் காண்கிறார்.
மோதலில் மண்ணை கவ்வும் மயில் வாகனம், துறைசிங்கத்தை பழிவாங்க தன் செல்வாக்கை கொண்டு அவரை சென்னைக்கு இடம் மாற்றுகிறார். சென்னை வரும் துரைசிங்கம் எப்படி மயில் வாகனத்தை ஒடுக்கி வெற்றி காண்கிறார் என்பதை கொஞ்சமும் சலிக்காமல் நேர்த்தியான காட்சிகளை கொண்டு நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

நல்லூர் கிராமமாகட்டும், கூட்டம் நிறைந்த சென்னையாகட்டும்., கதையை எவ்விதத்திலும் தவற விட்டு விடாமல் தேவையான அளவு மசாலா கலவையோடு படம் தந்திருக்கிறார் ஹரி. கதையோடான நகைச்சுவை காட்சிகள், சல்லிப்பு உண்டாக்காத சண்டைக் காட்சிகள் படத்திற்கு பலம்.

சூர்யா, கலகமற்ற நடிப்பு.
முகத்தின் பெரும்பாலான இடங்களில் மீசையோடு, படம் முழுக்க மிரட்டியிருக்கிறார். வசனங்கள், சண்டை காட்சிகள், காதல் வயப்படும் காட்சிகளென நடிப்பில் தெளிவு.

அனுஷ்கா., அழகு.
தமிழ் ரசிகர்களூடே இது அனுஷ்கா காலம் போலும்.
சூர்யாவின் மிரட்டலான நடிப்பை, தன் உதடு சுழிப்புகளில் கவர்ந்துவிட்டிருக்கிறார்.
பாடல் காட்சிகளில் மட்டும் வந்து போகாமல், கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்.

விவேக்...கலைவாணர் ஸ்டைல் காமெடியை விட்டுவிட்டு 'ஏட்டு ஏரிமலை'யாக கலக்கியிருக்கிறார். பெரும்பாலானவை(வழக்கம்போல!!) இரட்டை அர்த்த வசனங்களாக இருப்பினும், கண்டிப்பாக நம்மை சிரிக்க வைக்கிறது.

பிரகாஷ் ராஜ், வில்லன்னுகேற்ற நடிப்பு..வழக்கம் போல.
நடிப்பில் மின்னுகிறார்.

ராதா ரவி, நிழல்கள் ரவி, மனோரமா, நாசர், போஸ் வெங்கட் என பெரும் நட்சத்திர கூட்டம். எல்லோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

நம்மை நாற்காலியோடு இரண்டரை மணி நேரம் கட்டிபோடிருக்கும் திரைக்கதைக்கு ஒரு சபாஷ்!
திரைக்கதையின் வேகத்தில் V.T.விஜயனின் கத்தரிக்கோலுக்கு முக்கிய பங்குண்டு.

தமிழ் படங்களுக்கே உரித்தான., ஒரே பாடலில் சாதிக்கும் ஹீரோ, பார்த்தவுடன் காதல் வயப்பட ஹீரோயின், Assistant Commissioner-யும் எதிர்த்து பேசி ஸ்டேஷனை விட்டு வெளியேற்றும் இன்ஸ்பெக்டர் ஹீரோ, ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் நிராயுதபாணியாக நின்று எல்லோரையும் பந்தாடும் ஹீரோ என படம் நெடுக மசாலா வாசம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஐந்து பாடல்கள்.
பாடல்கள் ஏதும் மனதில் நிற்காவிட்டாலும், அனுஷ்காவின் ஆட்டத்தால் கண்களில்  நிற்கிறது.

நாலு வரிக்கதைக்கு அதிவேக திரைக்கதையோடு இன்னபிற மசாலா அம்சங்களையும் சேர்த்து வெற்றிப்படம் தருவதேப்படி என்பதற்கு சிங்கம் நல்ல உதாரணம்

சந்திப்போம்....N

Monday, June 7, 2010

வீழ்வது நானாக இருப்பினும்.. வாழ்வது தமிழாக இருக்கட்டும்....

செம்மொழியான தமிழ் மொழியாம்.
இதோ நம் ரஹ்மானின் இசையில் தமிழ் மாநாட்டிற்க்கான தமிழ் வாழ்த்துப் பாடல்.
இரண்டரை மாத உழைப்பு.. எழுபது பாடகர்கள்... என பின்னியிருக்கிறார்கள்.

ஹாலிவுட்டில் சுறுசுறுப்பாக இசைத்துக்கொண்டிருந்த ரஹ்மானை கொண்டுவந்து இந்த பாடலுக்கு சுருதி சேர்க்கச் செய்திருக்கிறார்கள்.

"பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்.." என T.M. சௌந்தரராஜன் ஆரம்பிக்க, யுவன், ஸ்ருதிஹாசன், P.சுஷீலா, ஹரிணி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் ஜேசுதாஸ், பென்னி தயல் என நீளுகிறது இந்த இசைஞர் குழுமம்.

கலைஞரின் பாடல் வரிகள், கௌதம் மேனன் இயக்கம், மூன்று வெவ்வேறு தலைமுறை பாடகர்கள் என மெய் சிலிர்க்கவைக்கும் அம்சங்கள் பல..

பாடலுக்கு மேலும் மெருகேற்ற., குமரியில் தொடங்கி, ராமேஸ்வரம் கடற்கரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வேளாங்கண்ணி....மகாபலிபுரம், டைடல் பார்க் என பல 'அட' சொல்ல வைக்கும் கோணங்களில் கேமரா கொண்டு வர்ணம் தீட்டி இருக்கிறார்கள்.

கர்நாடக சங்கீதம் - அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ மற்றும் சௌம்யா..
கிராமிய இசை - M.Y.அப்துல் கனி, காஜாமொய்தீன், S.சாபுமொய்தீன்
ராப் - ப்லேஸ்
என இசைக் காவியம் படைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்க்கும் போதும், என் மனதில் பட்டாம்பூச்சிகளின் படையெடுப்பு...

இதோ உங்கள் பார்வைக்கு..


Friday, June 4, 2010

தனிமை

நீ
என்னுடன் இருக்கும்போது
பேசுவதை விட
நீ
இல்லாத என் தனிமையில்
உன்னுடன் பேசுவதே அதிகம்..!

Wednesday, June 2, 2010

என் மனதில்

சில நேரம் நினைவில்..
சில நேரம் அருகில்..
சில நேரம் தொலைவில்..
அனால்
நீ
என்றும்
என் மனதில்..

பிரிவு

உண்மையான
காதலை
புரிந்து
கொள்ள
ஒரு
சந்தர்ப்பம் -  உன் பிரிவு !!

சுறா

வேட்டைக்காரன் வந்து ஓடிய தடம் மறையும் முன், இதோ மறுபடியும் சன் பிக்சர்ஸ் - விஜய் கூட்டணியில் : சுறா.

என்ன எதிர்பார்க்கலாம் விஜய் படத்தில்.,
  • ஊர் போற்றும் இளைஞனாக விஜய் அல்லது கிராமத்திலிருந்து சென்னை வந்து வில்லன்களை பந்தாடும் வெகுளி இளைஞனாக விஜய்
  • ஊரைக் கட்டி ஆள நினைக்கும் அரசியல்வாதி அல்லது கட்டப்பஞ்சாயத்து தாதா அல்லது பணக்கார முதலை... இவர்களை எதிர்க்கும் ஹீரோவாக விஜய்
  • ஹீரோவை அதிரடியாக காட்ட(நடந்து வருகையில் மின்னல்/இடி பூமியில் இறங்குவது போலும், எதிரிகளை பந்தாடுகையில் ஹீரோவின் கைகள் ஐந்தாகவும் நூறாகவும் பிண்ணுவதும், தீ பறக்கும் கண்கள் என...)., மென்பொருள்/கேமரா உத்திகள், அதிரவைக்கும் பின்னனி இசை
  • கூட்டம் நிறைந்த சந்தையில் சண்டை காட்சிகள், வில்லன்களை துரத்தி துரத்தி பந்தாடும் சண்டை காட்சிகள்
  • வார்த்தையில் ஜாலங்கள் செய்யவதாக எண்ணி 'பஞ்ச்' வசனங்கள்
  • அம்மா/அப்பா/தங்கை/அக்கா/சித்தப்பா/தாத்தா/பாட்டி......நண்பன்... என இதில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்து.. அதற்கேற்ற செண்டிமெண்ட் காட்சிகள்
  • ஹீரோ அறிமுக காட்சிக்கு ஒரு அதிரடிப் பாடல்
  • மற்ற மூன்று பாடல்களுக்கு நடனமாட ஒரு முன்னனி நடிகை, ஹீரோயினாக.
  • இடுப்பாட்டி, தொப்புள் காட்டி, செர்ரி பழ வர்ண உதடு கடித்து ஆடும் கவர்ச்சி நடிகையுடன் ஒரு பாடல்
  • இதில் குறைந்தபட்சம் ஒரு பாடலுக்காவது சுவிட்சர்லாந்தில் நடனம்.
  • இந்த பட்டியலில் ஏதாவதொரு பாடல்..கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்
  • இவையெல்லாம் சலித்து விடாமலிருக்க ஆங்காங்கே தலைக்காட்டும் வடிவேலு அல்லது விவேக் நகைச்சுவை காட்சிகள்
  • ரசிகர்கள் தான் தனது பலமென்று புரியவைக்க ஆங்காங்கே அவர்களை போற்றி வசனங்கள்
  • அடுத்த காட்சி என்னவென்று மூன்றாம் வகுப்பு சுட்டியும் சட்டென்று கூறிவிடும் கதை தளம்
இவை தான் சமீபகால விஜய் படங்களில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது.
மேலே குறிப்பிட்ட எதற்கும் குறை வைக்காமல் வெள்ளி திரைகளில் உலா வந்து கொண்டிருக்கிறது - சுறா

யாழ்குப்பம், அதில் வசிக்கும் மீனவர்கள்.. அவர்கள் போற்றும் தலைவனாக சுறா(விஜய்). மீனவர்கள் வசிக்கும் இடத்தை ஆக்கிரமித்து கேளிக்கை பூங்காவாக மாற்ற நினைக்கும் அரசியல்வாதி சமுத்ர ராஜா(தேவ் கில்). ஹீரோ ஏழையாக இருப்பதால் பணக்கார ஹீரோயினாக பூர்ணிமா(தமன்னா). 
மீனவக்குப்பத்து நண்பனாக அம்பர்லா(வடிவேலு).
வில்லன்களின் சூழ்ச்சிகளிலிருந்து எப்படி தன் மீனவ குப்பத்தை மீட்டு, அங்கு வாழும் அனைவருக்கும் எப்படி வீடு கட்டி தந்து வெற்றி காண்கிறார் சுறா என்பது தான் மீதிக்கதை.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் S.P.ராஜ்குமார்., நான்கு வரிக்கதையில் எதற்கு இயக்கம், அதுவும் விஜய் நடிக்கும் படத்தில் எதற்கு என்று சும்மா இருந்துவிட்டாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்(!).

தமன்னா., அவருடைய முந்தய படங்களை நினைவூட்டுகிறார் பல காட்சிகளில். பல படங்களில் ஒரே மாதிரி நடிச்சு ஹிட் ஆகுற காலம் ஜோதிகாவோட மலையேறி போச்சு என்பதை யாராவது அவரிடம் சுட்டி காட்ட வேண்டிய நேரமிது.

வடிவேலு., நம்மை சிரிக்கவைக்க முயற்சிசெய்து படம் முழுக்க தோற்றிருக்கிறார்.

தேவ் கில், ரியாஸ் கான், ஸ்ரீமான், ராதா ரவி தங்கள் பங்கை செய்துவிட்டிருக்கிறார்கள்...அவ்வளவே(!)

படத்தில் முற்றிலும் புரியாத காட்சிகளில் ஒன்று., "விஜய்., தான் வில்லனிடம் கடத்திய மடிக்கணிணிகளை மும்பை சென்று யாரோ ஒரு தொழிலதிபரிடம் விற்ப்பது போல்"
உண்மையில் எனக்கு விளங்கவில்லை, என்ன செய்ய முயற்சிக்கிறார்களென்று.
இது கலியுகமில்லை..கணிணியுகம்...
படிப்பறிவின்றி கத்தரிக்காய் வியாபாரம் செய்பவருக்கும் 'IT Recession' வரை என்னவென்று புரியும் இந்த காலத்தில், இதைப்போன்ற காட்சிகளால் மக்களை முட்டாளாக்க முயற்சிப்பது சிரிப்பை வரவைக்கிறது.

சண்டைக் காட்சிகள் ஏற்கனவே பார்த்துச் சலித்தவை.

மணி ஷர்மா இசையில் ஐந்து பாடல்கள்... 'சிறகடிக்கும் நிலவு..' பாடல், படத்தில் மீதமுள்ள பாடல்களை காட்டிலும் மேன்மை.

சுருக்கமாக ஒரு வரியில் : சுறா ஓடுற தியேடர் பக்கம் கூட போய்டாதீங்க பாஸ்.

சந்திப்போம்...N

Friday, May 28, 2010

நீ

நான்
விரும்பிய எல்லாமே
வெகு தூரத்தில்..
அன்று
நிலவு..
இன்று
நீ!

Tuesday, May 18, 2010

உன்னுடன்..

நீ
கண்டும் காணாமல்
கடந்து செல்கிறாய்..
நான்
பார்த்தும் பாராமல்
பின்தொடர்கிறேன் உன்னை...

Thursday, May 13, 2010

இதயம்

இமை மூடும்
நேரத்தில்
இதயம் சொல்லும்..
நீ உறங்கு
நான்
உறங்காமல் துடிக்கிறேன்
என்று!

Wednesday, May 12, 2010

அனுபவி ராஜான்னு அனுப்பிவெச்சான்...

சனிக்கிழமை, மே 8 2010
எங்கோ படித்த ஞாபகம்., வட துருவத்தில் வாழும் பனிக்கரடிகள் சீல்களை பிடிக்க பனியில் குழித்தோண்டி காத்திருந்து வேட்டையாடும்போது தன் இரு கைகளால் மூக்கை மூடிக்கொள்ளுமாம் மீதமுள்ள தன் உடலும், சுற்றியிருக்கும் பனியும் 'பளீர்' வெள்ளை நிறம் என்பதறிந்து.
காரணம்: ஒரு மொத்த வெள்ளை(வெளேர்) பரப்பில் தன் மூக்கின் நுனியில் மட்டும் கருப்பு நிறம் கண்டு தன் இரையாகப்போகும் சீல்கள் உஷாராகிவிடும் என்பதால்தான் இந்த ஏற்பாடாம்(!).
எப்படி தெரியும் இந்த கரடிகளுக்கு தன் மூக்கின் நிறம் என்னவென்று... தன்னை தானே தண்ணீரில் பார்த்தா அல்லது மற்ற பனிக்கரடிகளை காணும்போதா !?

நானும் கிட்டத்திட்ட ஒரு பனிக்கரடியைப்போல் தான் என் உடல் முழுவதையும் உள்ளடக்கி போர்வைக்குள் குடியிருந்தேன் பதினோரு மணி வரை, சனிக்கிழமை என்பதால்.
ஜன்னலின் ஊடே என் கண்களை கீற வரும் சூரிய ஒளியும், என் அறை நண்பனின் வினோத கர்ஜனையோடான(!) பல் தேய்க்கும் பழக்கமும், அன்றைய தினம் விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டதை எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தன. 

காலையில் எழுந்து பல் துலக்கியதும் பெரும்பாலானோர் மூளையில் தட்டுப்படும் அதே சொல்... ஆம்...
"யார் அங்கே... கொண்டு வாருங்கள், நான் பருக வெறியம் நீக்கிய குளம்பி" என்று கூற எனக்கு ஆசை இருந்தாலும், மறு ஜென்மத்தில் 'Rockefeller' பரம்பரையில் பிறக்கும் வரை அது சாத்தியமில்லை என்று உணர்ந்து வெகு நாட்களாகிவிட்டது.

துயிலெழுந்த நேரம், மதியவேளை ஏற்கனவே நெருங்க ஆரம்பித்து விட்டிருந்ததால், காபி தயார் செய்யும் திறன்படைத்த என் மூளையின் உயிரணுக்கள் செயலிழந்துவிட்டிருந்தன.
காலை நேரக் காபி குடிப்பதோடு சேர்த்து, வாரக்கடைசியில் முடிக்க வேண்டிய இன்னபிற வேலைகளையும் முடித்துவிட முடிவு செய்தேன்.

கார் பயணம்(காபி குடிக்க) : ருபாய் 677
காபி + பால் : ருபாய் 451
மறுபடியும் கார் பயணம் : ருபாய் 1354
முடி திருத்த(கொசுறு பணம் சேர்த்து) :  ருபாய் 1219
நான் சமைக்கும் பதார்த்தங்களுக்கான மளிகை கடை பட்டியல்.,
               இதயம் நல்லெண்ணெய் : ருபாய் 492
               கடுகு, உப்பு, புளி, மிளகாய், திப்பிலி என பட்டியலில் சில : மொத்தம் ருபாய் 2012 
வீடு திரும்ப கார் பயணம் : ருபாய் 1580

மீதமெல்லாவற்றுக்கும் இருக்கவே இருக்கு 'MasterCard'
என்று முடிந்து விடும் இந்த விளம்பரம் அல்லது 
'தெளிந்துவிட்டது என் கனவு' என்று கூறக்கேட்க, கேலிச்சிரிப்போடு காத்திருக்கும் உங்களில் சிலருக்கு இதெல்லாம் 'உண்மையன்றி வேறில்லை' என்று கூறினால் என்னவாக இருக்கும் உங்களது பதில்..?

இல்லை.. இல்லை....இவை நடப்பது 3012-ஆம் வருடத்தில் இல்லை..
எல்லாம் நிகழ்காலம் தான்.
இவையெல்லாம் அமெரிக்க டாலர்களில். 
மேலிருக்கும் பட்டியலில், ருபாய்க்கு அருகில் இருக்கும் எண்கள், 44.7250-ஆல்  வகுக்கப்படவேண்டியவை..(இன்றைய நிலவரத்திற்கு!)
கார் பயணம்(காபி குடிக்க) : $ 15
காபி + பால் : $ 10
மறுபடியும் கார் பயணம் : $ 30
முடி திருத்த(கொசுறு பணம் சேர்த்து) :  $ 27 
மீதம் கணிக்கப்படாதவை, உங்களின் கணிதத்திறன் மேம்பாட்டிற்க்கு.. ஹி....ஹி...

ஆம்! இங்கு(அமெரிக்கா) வந்து வாழ ஆரம்பித்ததிலிருந்து என் மூளையினுள் ஒரு கணிப்பானை பொருத்தி, நான் செய்யும் எல்லா செலவுகளையெல்லாம் நாற்ப்பத்திஐந்தால் பெருக்க செயல்படுத்தப்பட்டதைப்போல் உணர்கிறேன்.

கலாச்சார மாற்றங்களை எதிர்கொண்டு வாழ்வதோடு மட்டுமல்லாமல், 
காந்திக்கும் பெஞ்சமின் பிராண்க்ளினுக்கும்(அமெரிக்க நூறு ருபாய் நோட்டிலிருப்பவர்) இருக்கும் வேறுபாடுகளும் வித்தியாசங்களும் இன்னும் சொல்லப்போனால் உலகப்போருளாதாரத்தின்(!) அடிப்படை புரிந்து விடவும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும்.

இந்தியாவிலிருந்து இங்கு வந்து வாழும் பெரும்பாலானோருக்கு... இல்லை... இல்லை... எல்லோருக்கும் ஏற்ப்படும் இணைப்போக்கு தான் இது.

ஆறு மாதங்களுக்கு பின் இந்த எண்ணம் தோய்ந்து, செலவுகளை நாற்ப்பத்திஐந்தால் பெருக்கும் கணிப்பான் ஒரு மூலைக்கு தள்ளப்படும்., அதன் செயல் வேகம் சற்றும் குறையாமல்(!).

ஏன் நம் நாட்டை இன்னும் "வளர்ந்து வரும் நாடு" என்று இன்னும் கூறுகிறார்கள் என்ற அர்த்தம் புரியும். நம் நாட்டில் பெட்ரோல் விலை உயரும் போது, செய்தி வாசிப்பாளினி கூறும் அர்த்தம் புரியாத..."உலக வர்த்தகச்சந்தையில் கச்சா எண்ணையின் விலை பாரெல் ஒன்றிற்கு..." என்பதன் விரிவாக்கம் சற்று விளங்கவரும்.

"அட! எனக்கு இன்றுவரை அப்படி(45-ஆல் பெருக்க) எல்லாம் ஒன்னும் தோணலயே.." என்று இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறியவர் யாரேனும் இப்படி கூறக்கேட்டால், கண்டிப்பாக அவர் புளுகு மூட்டை என்று முத்திரை குத்தலாம்.

இந்த புளுகு மூட்டைகள் தான், "முடி வேட்டுவதைப்போன்ற அர்த்தமற்ற(!) செலவுகளில் மாதத்திற்கு ஒரு ஆயிரம்($15) செலவு செய்வதா ?" என்று அறிவு ஜீவித்தனமாக யோசித்து, அந்த செலவை ஆறு மாதத்திற்கு ஒரு முறை குறைக்க மொட்டை அடித்துக்கொள்ளும் கூட்டமும்.

இவர்களைபோன்றவர்களின் அட்டகாசம்(!) கொஞ்சம் அதிகமென்றே கூறலாம், உண்ணும் உணவில் ஆரம்பித்து வாழ்வின் அத்தியாவசிய தேவைகளையும் கணக்கிட்டு வாழ்பவர்கள். இவர்கள் கூறும் காரணம், "எல்லாம் விலை ஜாஸ்தி!".

இதையெல்லாம் 'விலை ஜாஸ்தி' என்று கூறுவது அர்த்தமற்றது என்பது என் கருத்து. பொருளாதார நிலவரத்தையும், சராசரி வருமான அளவுகோல்களின் அடிப்படையில் தான் இந்த இந்த விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று புரிந்தாலும் இவர்களின் கஞ்சத்தனத்தை நியாயப்படுத்த கிடைத்த நொண்டிச்சாக்கு தான் இந்த 'விலை ஜாஸ்தி' வாதம்.

சிங்காரச்சென்னை என்றால்.,
காபியின் சுவையை உடலின் ஒவ்வொரு உயிரணுவுக்கும் உணர்த்தும் நாயர் டீ கடைகள் எல்லா தெரு முனைகளிலும் உண்டு. சாலையோர கடை, கிளாஸ் டம்ளரில் காபி, மணமணக்க மசாலா வடை, சுடச்சுட இட்லி என்று இருபது ரூபாயில் காலைப்பசியாறிருக்கிறேன் என் நண்பர்களோடு.

'சென்னை டீ கடைகள்' என்றதும் சற்று அண்மையில் நடந்த சுவாரசிய சம்பவம் மனதில் வந்தது. அன்றைய காலை விடிந்தது சென்னைப்பட்டினத்தில்.
விடிந்தது அன்று எனக்கு வேறுபட்டு தெரியவில்லை, காரணம் முழு இரவும் நான் உறங்காமல் முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று என் கண்களை பார்த்து எனக்கு நானே கேள்விகள் கேட்டு பதிலும் கூறிக்கொண்டிருந்தேன்.
'என்ன பாவம் செய்தேன் நான், இந்த கொடுமையை அனுபவிக்க!?' இது என் சுவர்க்கண்ணாடியின் புலம்பல்.
விடிந்தால் அமெரிக்க தூதரகத்தில் நேர் முகத்தேர்வு.
என்ன தான் என் மனதில் தொண்ணூற்றி ஒன்பது சதவிகித நம்பிக்கை இருந்தாலும் மீதமிருந்த அந்த ஒரு சதவிகிதம் என்னை தூங்க விடவில்லை.
எட்டு மணி நேர்முகத்திற்கு, ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டேன் நானும் என் நண்பனும் bike-ல்.

என் நண்பன் பைக் வெறியன்.
ஒரு தையல் ஊசியின் முனையில் நூல் புகும் அளவு இடமிருந்தாலும் சரி, அதனுள் பைக்கை நுழைத்து 'மயிர்க்கூச்செறியும் வேகத்தில்' லாவகமாக ஓட்டச்செல்லும் திறனுடையவன்.
"...சென்னையில் இருக்கும் சாலைகளை பெயர்த்தேடுத்துவிட்டோம் அதற்க்கு பதிலாக தரையிலிருந்து இருபது அடி உயரத்தில் கயிறு கட்டியுள்ளோம் இடங்களை இணைக்க இனி அதன் மேல் தான் இருசக்கர வாகனங்கள் செல்லவேண்டும்.." என்ற அறிவிப்பு வந்தாலும் கூட, எவ்வித மாற்றமும் வேண்டியிருக்காது அவனின் பைக் ஓட்டும் லாவகத்தில்.

அவனுக்கு 'வேளச்சேரி - ஜெமினி பாலம் - அமெரிக்க தூதரகம்' என்பதற்கு பதினைந்து நிமிடம் கூட ஆகவில்லை. ஆறு மணிக்கு முன்னதாகவே வந்து சேர்ந்தாயிற்று.
நேரம் கடத்த நாங்களும், ஜெமினி பாலம் முதல் ஸ்பென்சர் வரை எத்துனை கடைகள் என்பதில் ஆரம்பித்து குப்பை தொட்டிகள் வரை கூட எண்ணித் தீர்த்துவிட்டோம் 7.00  மணி வரை.
டீ/காபி குடிக்கலாம் என்று முடிவுசெய்து, கத்தீட்ரல் சாலையில் ஒரு டீ கடையை தேர்வு செய்து டீ குடிக்க ஆரம்பித்தோம்.
சற்று நேரத்திற்க்கெல்லாம் அந்த கடையில் டீ வாங்க அப்படி ஒரு அலை மோதும் கூட்டம். காரணம் புரியாமல் நாங்கள் ஒருவரையொருவர் வெறித்துக்கொண்டிருந்த நேரம் மின்னல் வேகத்தில் பேருந்துகளின் அணிவகுப்பு 'Stella Mary's' என்ற பெயர் தாங்கி.
சுடிதார் பாவைகளும், சேவல் கொண்டை நிற உதட்டோடு ஜீன்ஸ் பாண்ட் அழகிகளும் இறங்க, டீ கடை வாடிக்கையாளர்களின் அர்த்தம் விளங்கியது எனக்கு.

கேட்கிறது உங்கள் மனக்குரல் எனக்கு, "Stella Mary's தெரியாதாம் இவனுக்கு... போதும் நிறுத்து.. 'நாங்கள் நம்பிவிட்டோம்' "
என் சென்னை அத்தியாயம் தொடங்கியது என் வேலை நிமித்தமாகத்தான், என் பள்ளி/கல்லூரி நாட்கள் சென்னையில் இருந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும் எனக்கும்.

எங்கிருந்தால் என்ன.,
"ஆண்டவன் படைச்சான்...
எங்கிட்ட குடுத்தான்..
அனுபவி ராஜான்னு அனுப்பிவெச்சான்..." இந்த பாடல் வரிகள் தான் எனக்கு முணுமுணுக்க தோன்றுகிறது.

ராவணன் படப் பாடல்கள் கேட்க விழைந்தேன் சென்ற வாரம்...
மனதை கொள்ளைகொள்ளும் இசை.
'கணிணிகளுக்கு F5 போத்தானைப்போல, இந்த பாடல் வரிகள் என் மூளையின் செல்களுக்கு' என்று கூறினாலும் கூட அது மிகையாகாது.
நல்ல வேலை நான் கிராமபோன்(Gramophone) காலத்தில் பிறந்து இந்த பாடல்களை கேட்கும் நிலை இல்லை. அப்படி இருந்திருந்தால், அந்த பாடல்களை தாங்கியிருக்கும் தகடுகள் இந்நேரம் உஷ்ணத்தில் துவாரங்கள் கண்டிருக்கும்.
"காக்கை உன் மேல் எச்சமிட்டதை நினைத்து எரிச்சளுராதே, யானைகளால் பறக்க முடியவில்லை என்று சந்தோஷப்படு.." என்பதைப்போல் உள்ளதல்லவா என் உதாரணம்!?

என் தொடுதிரை Ipodல் இது வரை முன்னூறு முறைக்கு மேல் இந்த பாடல்களை கேட்டுத்தீர்ந்து விட்டேன்.

இதோ என் நாற்பதாவது வலைப்பதிவின் முடிவிற்க்கு வந்தாகிற்று.

நாற்ப்பது வலைப்பதிவுகள் 128 நாட்களில் அல்லது 3072 மணிநேரதில் அல்லது 184320 நிமிடங்களில் அல்லது 11059200 வினாடிகளில்.... எப்படியும் சொல்லலாம்.
உங்களின் தொடர்ந்த உற்சாகத்திற்கு தலை வணங்குகிறேன் வாசகர்களே.

இந்த வாரம் இணையத்தில் படித்ததில் பிடித்தது:
http://qurl.com/qj2hb (இதை படிக்க ஏதுவாக்கிய நட்பு வட்டாரதிற்க்கு, சிறப்பு நன்றிகள்)

படித்ததில் பிடித்த கவிதை:
நான்
ஆடையாக பிறந்திருந்தால்
என்னை உடுத்திக்கொண்டிருப்பாய்..
உன்
காதலனாகி விட்டேன்
அதான் துவைத்துக்கொண்டிருக்கிறாய்...

சந்திப்போம்...N










Friday, April 23, 2010

கள்ள விழிகளில்

நடுஜாமத்தில் தட்டி எழுப்பி என் இரு கண்களையும் ஒரு கருப்புத்துணியால் மறைத்து கட்டிவிட்டு செய்யச்சொன்னால் நான் 100% சரியாக செய்யக்கூடிய காரியங்களில் சில.,
- எந்த ஒரு கணிணியையும்(மேசைக் கணிணி/மடிக் கணிணி) அதிகபட்சம் ஒரு திருபுளியை மட்டும் கொண்டு, அதன் கடைசி பாகம் வரை பிரித்துவிட்டு மறுபடியும் அது முழுமையாக செயல்படும் விதம் மீண்டும் சேர்ப்பது.
- ஒரு கணிணியின் செயல்திறன் அறிந்ததும், அதற்க்கு தேவையான மென்பொருள் நிறுவ எந்த நிமிடத்தில் எந்த எந்தெந்த பொத்தான்களை அழுத்தி அதை முழுவதும் செயல் பெறவைக்க முடியுமென்பது.
- எனக்கு வேலை செய்ய ஒதுக்கப்பட்ட எந்த கணிணியிலும், ON என்ற பொத்தானை அழுத்தியதிலிருந்து எவ்வளவு நேரத்தில் அது என் காவற்ச்சொல்லை வினவும் என்பதறிந்து அதன் பசியாற்றி பின்னர் என் தினசரி அலுவலுக்கு தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் திறந்துவைப்பது.
- நான் அனுப்ப நினைக்கும் குறுந்தகவலை என் கைப்பேசியிலிருந்து எந்த தவறுமின்றி தட்டச்சு செய்து குறிப்பிட்டவருக்கு அனுப்புவது.
- தொலைப்பேசியின் மறுமுனையில் இருப்பவருடைய கணிணிக்கோளாறை, அவர் சொல் மட்டும் கேட்டு எந்த திரையையும் பாராமல், எந்த புத்தகத்தையும் வினவாமல் சரி செய்வது.
- கணிதத்தில் pi -யின் மதிப்பீடு என்னவென்று இருபத்திஐந்தாம் தசமம் வரை கூறுவது.
- குறைந்தபட்சம் அரை மைல் தூரமாவது ஒரு நேர் கோட்டில் நீந்திச்செல்வது.
- நிமிடத்திற்கு 55 வார்த்தைகள் வீதம் தட்டச்சு.

விட்டால் இன்னும் நீளும் இந்த பட்டியல்....
இங்கு 'பட்டியலிடக்கூடயவை(அல்லது பட்டியலிட வேண்டியவை!) எத்துனை' என்ற கேள்விகள் எழும் நிச்சயம்.. ஆதலால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...!

"என்ன ஆச்சு உனக்கு !? "
"என் இந்த அர்த்தமற்ற பட்டியல் திடீரென்று ?"
உங்கள் நெற்றிச்சுருக்கங்களின் அர்த்தம் புரிகிறது எனக்கு.

அதெல்லாமிருக்கட்டும்., எனக்கு இன்னும் இரண்டு கண்களும் காதுகளும்(முகத்தில் எங்காவது) இறைவன் வரமளித்தாலும் கூட, கண்டிப்பாக நான் கோட்டை விடப்போகும் விஷயம்... இதோ...
- உப்பு..... ருசிக்கு..
- மஞ்சள் தூள்.... நிறத்திற்க்காக...
- மிளகாய்த்தூள்... காரத்திற்கேற்ப்ப...
- கடுகு.. சிறிதளவு...
- நறுக்கிய வெங்காயம்.... சாம்பார் அளவிற்கேற்ப்ப...
- நறுக்கிய தக்காளி.... வெங்காயத்தின் அளவிற்கேற்ப்ப...
- நன்கு தட்டிய பூண்டு....  அதுவும் சிறிதளவு(!)....
- புளி... ஒரு எலுமிச்சை பழ அளவு..
- தண்ணீர்... தேவைக்கேற்ப்ப...

ஆம்...!
உங்கள் கணிப்பு சரியே... சமையல்.

மேற்க்கண்ட(மாதிரி!) சமையல் குறிப்புகளை.,
கசக்கி தூக்கியெறியும் முன்பு நோட்டம் விடும் வேர்க்கடலை மடிக்கப்பட்ட நாழிதளின் தாளிலோ,
டீ கடையில் பஜ்ஜி மடித்துத்தரப்படும் தினசரியிலோ,
ஆர்வமின்றி புரட்டும் ஏதோ ஒரு வார இதழிலோ,
நண்பனின் தொலைபேசி எண் குறிக்கும் பொது தென்படும் அம்மாவின் சமையல் குறிப்பு நோட்டிலோ,
தொலைக்காட்சியில் வேறு அலைவரிசை மாற்றும் போது தென்படும் 'சமைத்துப்பார்' நிகழ்ச்சியிலோ  நாம் அனைவரும் கண்டிப்பாக எங்காவது ஒரு நாள் காணப்பெற்றிருப்போம்...

நானும் உங்களில் ஒருவனாகத்தான் இருந்தேன், சமைக்கும் கட்டாயம் நேரும் வரை(பெண் வாசகிகள் கோபம் கொள்ள வேண்டாம்...).
நான் இங்கு(சிகாகோ) வந்ததிலிருந்து, இதைப்போன்ற சமையல் குறிப்புகள் தான் எனக்கு படியளந்து கொண்டிருக்கின்றன..
காரணம்., புர்ரிட்டோ, கோர்டிடாஸ், கியேசடியா, நாக்கோஸ், டோர்டாடாஸ், குங்பாவ் சிக்கன், ஹநி வால்நெட் ஷ்ரிம்ப், சளுபாஸ், லான்குவா....(கவலை வேண்டாம், எத்துனை முறை படித்தாலும் வாயில் நுழையாத, புரியாத, அர்த்தம் விளங்காத பெயர்கள்தான் இவையெல்லாம்....) என இன்னும் பல என்று ஊர் பேர் தெரியாத உப்பு சப்பு காரமற்ற உணவுகளால் செத்து மடிய தயாராக இருக்கும் என் நாக்கு..!

நான் இங்கு வந்து சில வாரங்களில், கார உணவு வகைகள் உண்ண முடிவதில்லை என்று புலம்புவதை கேட்ட என் அமெரிக்க நண்பர்களிலொருவர்.,
"குமரன், கவலை வேண்டாம். நம் அலுவலகத்திலிருந்து  வெகு அருகாமையில் ஒரு ஹோட்டல் உண்டு, அங்கு நான் உன்னை கூட்டிச்செல்கிறேன். அவர்கள் தயார் செய்யும் சில உணவுவகைகளில், காரமென்றால் அப்படி ஒரு காரம்.
நான் ஒரு முறை தெரியாமல் அங்கு உண்டுவிட்டு, என் நாக்கின் சுவையறியும் செல்களில் ஒரு பெரும் பகுதியை பறிகொடுத்தேன்" என்றார்.

'அடடா வெள்ளையனே... பாலை வார்த்தாயடா  என் வயிற்றில். பாடிகாட் முனீஸ்வரன் துணை இருக்கட்டும் உன்னுடன்....' என்று மனதில் கூறிக்கொண்டு குஷியோடு சென்று சேர்ந்தேன் அந்த ஹோட்டலுக்கு அவரோடு.

உணவு வகைகளை ஒவ்வொன்றாக பரிமாறவும் செய்தார்கள், நாங்கள் சாப்பிட ஆரம்பித்து இருபது நிமிடங்களுக்கு மேலாகியிருந்தது.
பொறுமையிழந்த நான், "நீங்கள் கூறிய அந்த கார சார உணவுகளை கொண்டு வரச்சொலுங்களேன்....வந்ததே அதற்குத்தானே" என்றேன் அவரிடம்...

"நான் சொன்ன அந்த அதிபயங்கர கார சார உணவு வகைகளெல்லாம் நீ சாப்பிட்டு முடித்து வெகு நேரமாகிவிட்டது, என்னால் தான் காரம் தாங்க முடியவில்லை" என்றார் கோவைப்பழ நிறத்தில் முகம் சிவந்து போய், கண்களிலும் மூக்கிலும் நீர்(!) வடிய..
"அட கடவுளே.... நான் சாதாரணமாக உண்ணும் காரத்தில் ஐம்பதில் ஒரு பங்கு கூட இல்லையே இது..." என்றேன் சிரிப்போடு...
"நீ இந்த உணவை வகைகளை உண்ணும்போதே ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது என்னால்" என்றார் அவர்.
"கார சார உணவு வகைகளை உண்பதென்பது எங்களுக்கு தாய்ப்பாலை போல" என்றேன் அவரிடம்.

பொதுவாக நான் காலையில் அலுவலகம் கிளம்பிச்செல்லும் அவசரத்திற்கு கை கொடுப்பது கண்டிப்பாக பாலும் Kellogg's-ம் மட்டும்தான்.
மதிய உணவிற்கு, சற்றுமுன் மேலே கூறிய(பெயர் விளங்காத) உணவுப்பட்டியலில் ஏதோ ஒன்றை உண்டு பசியாற வேண்டியது...
இரவிலும், சனி/ஞாயிறுகளில் மட்டும், என் நாக்கு இன்னும் விரக்தியில் செத்து மடிந்துவிடவில்லை என்பதை நினைவிலிருத்திக்கொள்ள நம் ஊர் சாம்பார், ரசம், பொறியல், கூட்டு என்று சமயலறையில் புகுந்து ஆய்வுகள் செய்யவேண்டுயுள்ளது.

  • வெங்காயம் நறுக்கும் போதுதான் உண்மையில் புரிகிறது ஏழாம் வகுப்பு  இரசாயனவியல் பாடம், Syn-Propanethial-S-Oxide கண்களுக்கு என்ன செய்யுமென்று.
  • தண்ணீரின் கொதிநிலை அளவும், குக்கரின் விசில் சப்தமும் ஏன் என்று  புரிகிறது இப்போது.
  • தக்காளியை எந்த வாக்கில் வெட்டுவது அதை பொடியாக நறுக்க.
  • கடுகுக்கும் எண்ணெய்க்கும் இடையில் நடக்கும் போரில் என் கையில் குண்டுகள் பட்டுவிடுவதை யாரிடம் முறையிடுவேன்.
  • 'அடி பிடித்துவிடும்' என்று சொல்லுவதன் சாராம்சம் என்னவென்று தெரிந்தது., நான் சமைத்த சாம்பார் சட்டியை விட்டு வர மறுத்த தினத்தன்று.
  • 'தேவைக்கேற்ப' என்ற வார்த்தை இன்றுவரை எனக்கு புரிந்ததாக தெரியவில்லை.
ஆய்வுகள் என்றதுமே புரிந்திருக்கும் உங்களுக்கு, ஆம்! சமையலுக்கு முக்கிய தேவை... அந்த உணவை வைத்து சோதனை செய்ய ஒரு ஜீவன்(!).

இதையெல்லாம் மீறி, குறிப்புகளை படித்து சமையல் செய்வது அலுத்துப்போய்... 
'நாமே ஏதாவது செய்தாலென்ன...?' என்று ஆரம்பித்து... 
முடிவில் சமையல் நன்கறிந்த நண்ப/நண்பிகள் "என்ன சமைத்தீர்கள்?" என்ற கேள்விக்கு "Carrot சாம்பார், கத்தரிக்காய் ரசம், கொத்தமல்லி கூட்டு, கருவேப்பிலை குழம்பு...." என்று நான் ஏடாகூடமாக பதிலளித்தது ஒன்றிரண்டு முறையல்ல(!).

'சமையல் தானே.. அதற்க்கு ஏன் இவ்வளவு புலம்பல்...?'
பதில் இருக்கிறது அதற்கும்.
பள்ளி முடியும் வரை அம்மாவின் அரவணைப்பில்...
கல்லூரி வாழ்க்கை பெரும்பாலும் மெஸ் சாப்பாடு...
வேலைக்கு சேர்ந்த பின்னர் முப்பொழுதும் அலுவலக காண்டீன் சாப்பாடு இல்லையேல் ஹோட்டல் உணவு... 

கணிசமான வருடங்கள் ஓடி தீர்ந்துவிட்டன நான் முதன்முதலாக சமைக்க ஆரம்பித்த சமயம்.
என்னிடம் யோசனை கேட்டால், சட்டென்று கூறிவிடுவேன் தயங்காமல்... 'பள்ளியிலோ கல்லூரியிலோ., ஆண்களுக்கு மட்டும் அடிப்படை சமைக்கும் திறன்களை பரிட்சையில்லா பாடமாகும்படி...'

'ஆண்களுக்கு மட்டும்' என்று கூறியது., 'சமையலறை பெண்களின் பிறப்புரிமை' என்று கூச்சலிடும் கூட்டத்தை சேர்ந்தவன் நான் என்பதால் அல்ல.
சமையல் கலையென்பது பெண்களின் உயிரணுக்களில்., பொறுமை, சகிப்புத்தன்மை, ருசியுணர்வு... இன்னும் இது போன்ற பல மென் குணங்களோடு ஏற்கனவே இருக்கும் ஒரு அங்கம். 

"பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை.... சந்தோஷ சங்கீதம்..." என்ற வைரமுத்துவின் பாடல் வரியில், வாழ்வின் துளிகள் தான் எத்துனை.

சிந்திப்போம்...N

Friday, April 16, 2010

அங்காடித்தெரு

நாம் தினமும் பார்க்கும் இடங்கள், அதில் உலாவும் மனிதர்கள், 
நம் பொழுதை கழிக்கவும், பண்டிகைக்கால புதுத்துணிகள் வாங்கவும் பளிங்கு தரையில் உலாவி, பொம்மை கட்டியிருக்கும் புடவையை நோட்டம் விட்டு, இலவச குளிர்பானங்கள் குடித்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் ரெங்கநாதன் தெரு கடைகளில் வேலைப்பார்பவர்களையும் அவர்களது வாழ்க்கை அவலங்களையும் யதார்த்தம் குறையாமல் கேமரா முன் கொண்டு வந்து., நம்மை 'அட!' போட வைத்து கண்களையும் ஈரமாக்கி விட... இதோ... "அங்காடித்தெரு"

அரசியல் வாக்குவாதங்கள், சுவிட்சர்லாந்தில் பாடல், லஞ்ச ஒழிப்பைப்பற்றிய பிரச்சாரம், குத்து பாடல்கள், ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் கதாநாயகன், கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் வந்து தாதாக்களை பந்தாடும் இளைஞன், தொப்புள் தெரிய நடனம்,  நுனி நாக்கு ஆங்கிலத்தில் பத்தி பத்தியாக வசனங்கள்.. இவை ஏதுமில்லால் வெற்றிப்படம் தர முடியுமென்பதை கண் முன் காட்டியிருக்கிறது அங்காடித்தெரு.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றாலும், தந்தையை விபத்தில் பறிகொடுத்து விட்டு வறுமையில் வாடும் குடும்பத்தையும், கடன்களையும் அடைக்க திருநெல்வேலியிலிருந்து சென்னை ரெங்கநாதன் தெரு 'செந்தில் முருகன் ஸ்டோர்' க்கு வேலைக்கு வருகிறார் லிங்கு(மகேஷ் : அறிமுகம்).
மூச்சு விடவும் நேரம் குடுக்காமல், கண்கொத்திப்பாம்பாக நோட்டம் விட்டு அடி உதை குடுத்து நெஞ்சில் பயம் விதைக்க முதலாளியிடம் சம்பளம் வாங்கும் மேற்ப்பார்வையாளர்கள், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் சம்பளம் குறைத்துவிட வடிவமைக்கப்பட்ட இயந்திரம், எந்த வேலை சொன்னாலும் 'முடியாது' என்று சொல்லாமல் செய்ய வேண்டிய கட்டாயம், நான்கு பேர் நிற்கும் இடத்தில் இருநூறு பேர் தோளோடு உறங்கும் அவலம், தனக்கு முன் உண்பவர் தரும் தட்டிற்க்கு காத்திருந்து உணவு உண்ண வேண்டிய நிர்பந்தம் என்று எல்லா வேதனைகளையும் தாங்கி வாடிக்கையாளர்களிடம் புன்னகையை மட்டும் உமிழப்பழகவேண்டிய சேல்ஸ் வேலை.
"பசியுற்ற முதலைகள் இருக்கும் கிணற்றில் விழாமலிருக்க, சீரும் மலைப்பாம்பின் வாலைப்பிடித்து தொங்கும் தருணத்தில் உயர்ந்த மரக்கிளையிலிருந்து நாக்கில் சொட்டும் தேனை" போல் ஆறுதலாக லிங்குவிற்கு அறிமுகமாகிறார் உடன் வேலை புரியும் கனி(அஞ்சலி)
நாட்கள் நகர ஆரம்பிக்க, கனியுடம் ஆரம்பித்த 'மோதல் அறிமுகம்' நட்பாகி... காதல் மலர்கிறது. காதலை ஏற்க மறுக்கிறது அவர்கள் உலகம்.
தங்கள் காதலை ஜெயிக்கவைக்க போராடும் இவர்களுக்கு வழி விட்டதா அங்காடித்தெரு என்பதை நிஜ வாழ்க்கையின் இலக்கணங்கள் மாறாமல் தருகிறது மீதிக்கதை.

 அழுக்கு படிந்த ரெங்கநாதன் தெரு, சேல்ஸ் வேலை செய்யும் நபர் என்று எவரும் அடையாளம் காட்டும் ஆடைகளோடு கதாபாத்திரங்கள் இத்தோடு மட்டும் கதையை நகர்த்திச்சென்ற டைரக்டர் வசந்தபாலனின் நம்பிக்கை படம் முழுக்க மிளிர்கிறது.

மகேஷ்., ரப்பர் பந்து கிரிக்கெட் விளையாடும் கிராமத்து இளைஞனாக, 
'நான் பன்னன்டாவதுல ஆயிரத்து நூத்தி இருபத்தி எட்டு மார்க்கு அண்ணே.. இந்நேரம் இன்ஜினியரிங் படிசிட்டுருக்கணும்' என்று கொதிக்கும் போது, தன் வேலை பறிபோய்விடும் பயத்தில் 'மன்னிச்சிருங்க அண்ணாச்சி' என்று கதறும் போது, 'இனிமே உன் முன்னாடி வந்து நின்னா பிஞ்ச செருப்பால அடி' என்று காதலியிடம் கோபம் கொள்ளும்போதும் அறிமுக நாயகன் என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அகற்றிவிடுகிறார். படம் முழுக்க 'பலே' சொல்ல வைக்கிறது அவரது நடிப்பு..
'கற்றது தமிழ்' அஞ்சலி., நடிப்பில் போதுமான அளவு முதிர்ச்சி. துருதுரு கண்களுடன் காதலனை பார்ப்பதிலும், 'வேறென்ன நான் பத்தாங்கிளாஸ் பெயில் ஆகிட்டேன், அவன் பாஸ் ஆகிட்டான்' என்று யதார்த்த வசனம் பேசும்போதும்,  'மாரைப் பிடிச்சு கசக்கினான்... பேசாம நின்னேன்!' என்று மகேஷிடம் வெடித்துவிட்டு, 'இதே டிசைன்ல மெரூன் கலரா?... இருக்குக்கா...' என்று கண்ணீரை துடைத்துக்கொள்ளும் போதும்.... என்று படம் முழுக்க நம்மை பெரிதும் நெகிழ வைக்கிறார்.

படம் முழுக்க சரவெடியாய் 'கனா காணும் காலங்கள்' புகழ் பாண்டி.
'எப்ப பார்த்தாலும் பக்கத்துக்கு வீட்டு பிள்ள மாதிரி வருமா வருமான்னு கேட்டல்லயா.... இப்ப நான் அந்த புள்ளைய விட மார்க்கு கூட..' என்று தந்தைக்கு விளக்கம் கூறும் போதும், 'மாரிமுத்து மெட்ராஸ் போறேன்டி, சிநேகா அக்கா ஊரு' என்று சிலுப்பும்போது,
'சேமியா ன்னு ஒரு பேரா!?' என்று காதல் வயப்படும் பொது, 'மாப்ள, எங்க அப்பன் சொல்லி கூட நான் கேட்கலடா.. உனக்காக தான் இங்க வந்தேன்' என்று கண்ணீர் மல்கும்போது என உண்மையில் கலக்கியிருக்கிறார்.

பேப்பர் பொறுக்கும் முஸ்லிம் பெரியவர், செருப்பு அணியாத முதலாளி அண்ணாச்சி, நெற்றி நிறைய குங்குமத்தோடு பூ விற்கும் பெண்கள், ரிமோட் கவர் விற்கும் சிறுவர்கள், பார்வையற்ற நடைபாதை வியாபாரி,  அண்ணா/அக்கா என்று நம்மை அழைக்கும் சேல்ஸ் ஊழியர்கள், தொப்பையோடு டிராபிக் கான்ஸ்டபிள் , உடல் முழுக்க வாட்ச் கட்டிக்கொண்டு அதை வியாபாரம் செய்பவர், குள்ளரும் அவரது மனைவியும், காதலன் கூறிய வார்த்தை தாங்க முடியாமல் கோபம் கொப்பளிக்கும் கண்களோடு தற்கொலை செய்துக்கொள்ளும் செல்வராணி, வேலை தேடி கலைத்து இலவச கழிவறையை சுத்தம் செய்து அதற்கு பணம் வசூலிக்கும் உழைப்பை நம்பும் இளைஞன் என்று படம் நெடுக வரும் அன்றாட கதாபாத்திரங்கள் மேலும் அழகு.

கதாநாயகன் சென்னை வந்துவிட்டதை உணர்த்த சென்ட்ரல் ஸ்டேஷன் காண்பிப்பது தமிழ் சினிமாவிற்கு புளிக்கும் பழமாகிவிட்டது என்று நினைக்கிறேன்(!).. இனி கோயம்பேடு பஸ் நிலையம் கண்களுக்கு இதம் தரட்டும்.

"....கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என ஜெயமோகனின் வசனம், படத்திற்கு 'ஜே!' போட வைக்கிறது. 
ரிச்சர்ட் மரிய நாதனின் காமெராவிற்கு நிச்சயம் பெரும்பங்குண்டு. ரெங்கநாதன் தெருவில் புழுக்கத்தொடு நடமாடும் மனிதர்களாகட்டும், சேற்றில் விழும் strawberry பழமாகட்டும்.. படமாக்கியிருக்கும் விதம் கைதட்டளுக்குரியது.

'அவள் அப்படி ஒன்றும்', 'உன் பேரை சொல்லும்' பாடல்கள் மனதிற்கு தாலாட்டு.

'அட யாருபா இவன் !?' என்று சாமானியனையும் கேட்க வைக்கும் 'கருங்காலி' மேற்பாவையாளரின் நடிப்பு,  "இந்த பை கடைல தான் எங்க அண்ணன் மெட்ராஸ்ல வேலை செய்யுது, அந்த பைய தருவீங்களா?" என்று தங்கை பாசம், கிராமத்து மகேஷின் முதல் காதல் கதையில் சென்னைப் யுவதியாக வந்து 'Strawberry ஒரு பலம்' என்று தமிழ் பேசும் பெண்,  வர்ணப்போடிகளில் மறைந்து போகும் கோலமிடும் பெண்ணின் ரத்தக்கரை, மாமூல் கொடுப்பதை குறித்து வைத்துக்கொள்ளும் அண்ணாச்சி, தன் குழந்தை தன் கணவனைப்போலவே ஊனமுற்று உள்ளதென்பதை நினைத்து பூரிப்படையும் முன்னாள் பாலியல் தொழிலாளி, கொடூர விபத்தோடு ஆரம்பிக்கும் முதல் காட்சி என்று படம் முழுக்க நம்மை சலிப்பு தட்டாமல் நகர்த்திச்செல்லும் தருணங்கள் நிறைய...

நம்மிடையே நடக்கும் அவலங்கள் என்னவென்று தெரிய, கண்டிப்பாக அனைவரும் கடக்க வேண்டிய தெரு --- அங்காடித்தெரு.

சந்திப்போம்....N

Saturday, April 10, 2010

நீ

உன்னை
நினைத்து
கொண்டிருபதிலே
போய்
விடுகின்றன
என் எல்லா
நிமிடங்களும்...

Wednesday, April 7, 2010

விழியிலெல்லாம்...

திங்கட்கிழமை....
விரைவில் இந்த சொல்லை அதிகாரப்பூர்வமாக 'கொடும் வசைச்சொல்' என்று அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.
மென்பொருள்/கணிணியியல் சார்ந்த நிறுவனங்களில் இதன் வீரியம் கொஞ்சம் அதிகமென்றே கூறலாம்.

வெள்ளி இரவை கேளிக்கை இரவென்று ஆரம்பித்து... சனி, ஞாயிறு என இரண்டு நாட்களும் "இரவினில் ஆட்டம்.. பகலினில் தூக்கம்...இதுதான் எங்கள் உலகம்..." என்றிருந்துவிட்டு., திங்கட்கிழமை வேலைக்கு வரும் போதும் இருக்கும் மனநிலை... வாழ்கையில் முதன் முதலில் பள்ளி செல்லும் மூன்று வயது குழந்தையின் மனநிலையிலிருந்து  எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல..

திங்கள் காலை., "எப்படி இருந்தது உங்கள் சனி/ஞாயிறு ?" என்று நம் சிங்காரச்சென்னையில்  ஆரம்பிக்கும் உரையாடல்களை கேட்பதே எனக்கு ஒரு தனி சுவாரசியம்.....

'மகாபலிபுரம் சென்றிருந்தேன் bike-ல் கிழக்கு கடற்கரை சாலை வழியே என் நண்பியுடன், கடற்கரையில் கால் நனைத்துவிட்டு பல்லவ சிற்ப்பங்களின் கலை நுணுக்கத்தை ஆராய்ச்சி செய்தோம்(!!), வராக குகைக்ககோவிலின் தனிமை எங்களை ரொம்பவே ஈர்த்தது(!!!), திரும்ப வரும்போது Mayajaal-ல் சினிமாவிற்கு சென்றோம் இரவு வரை நேரம் கடத்த..' என்பான் ப்ளேபாய்  பிரம்மச்சாரி,

'பெரிதாக ஒன்றும் செய்யவில்லை பாஸ், உணவு - உறக்கம் - உணவு - உறக்கம்' என்று கழித்தேனென்பான்  சோம்பேறி பிரம்மச்சாரி,

'காரில் பயணித்தோம் நானும் நண்பர்களும் பாண்டிச்சேரி வரை, Old-Monk கையும் Napoleon-யும் சந்திக்க(!)... வரும்போது திண்டிவனம் வழியாக வந்தும் கூட மாமாவுக்கு மாமூல் அழ வேண்டியதாகிற்று... அத்தோடு சேர்த்து மொத்த செலவு இருபதாயிரம்..' என்பான் கேளிக்கை விரும்பி பிரம்மச்சாரி,

'நான் ஊரில் இல்லை சார், சொந்தஊருக்கு சென்றிருந்தேன்.. நேற்றிரவு வரும்போது Unreserved பெட்டியில் பயணிக்கவேண்டியதாயிற்று.. தூக்கமே இல்லை.." என்பான் வாராவாரம் ஊருக்கு செல்லும் தூரத்து வெளியூர் பிரம்மச்சாரி,

'என்ன....வழக்கம் போல் தான் மச்சி, நண்பர்கள் - வீட்டு வேலை - திநகர் ஈகிள் பார் - பெசன்ட் நகர் கடற்க்கரை - வீடு - உறக்கம்' என்பான் உள்ளூர் பிரம்மச்சாரி,

'...நானும் என் காதலனும் கபாலீஸ்வரரை தரிசிக்க சென்றிருந்தோம், அங்கிருந்து தி-நகர்.. ஏதோ காரணத்தால் என் ATM கார்டு திடீரென்று வேலை செய்யவில்லை(!).... பிறகென்ன, அவனது தங்க வர்ண கிரெடிட் கார்டின் காந்த பட்டையில் போதுமான அளவு கோடுகள் விழுந்திருக்கும் இந்நேரம்(!!).." என்பாள் "பொட்டு வைத்துக்கொள்ளாததை நாகரீகம் என்றெண்ணும்" ஜீன்ஸ் பாண்ட்  யுவதி,

'....சனிக்கிழமை காலை பத்து மணிக்கு எழுந்தேன், அன்று சாயந்திரம் கோவிலுக்கு சென்றோம் நானும் என் தோழியும்... ஞாயிறு மதியம் ஹாஸ்டலில் Chicken சமைத்தார்கள், மீத நேரம் TV பார்த்து பொழுதைப்போக்கினேன்....' என்பாள் கோழிப்பண்ணையில் வாழும் சக அலுவலக அழகி,

'Sathyam தியேட்டர்-ல் ஹிந்தி படம் பார்க்க சென்றிருந்தோம் நானும் என் தோழிகளும், அங்கிருந்து Spencer Plaza போய் கையில் இலவசமாக மருதாணி வரைந்து கொண்டு, அங்கு மொத்தம் எத்துனை மாடிப்படிகளென்று எண்ணிக்கொண்டு வந்தோம்' என்பாள் மூன்று மாதங்களுக்கு முன் தமிழகத்தின் தென்கோடியிலிருந்து சென்னை வந்து வேலையில் சேரும்போது எண்ணெய் வைத்து தலையை படிய சீவி நான்கு வர்ணங்களில் கண்ணாடி வளையல் அணிந்து வந்ததை இன்று மறந்தவிட்ட 'அருக்காணி பேத்தி',

'நானும் என் மனைவியும் காரில் சென்றோம் முட்டுக்காடு படகு குழாம் வரை.. இப்போ  கார் ஓட்ட நல்லா இருக்கு சார்.. போன வாரம் தான் மாமனார் ரேடியல் டயருக்கு மொய் அழுதார்.. அதான் கொஞ்ச தூரம் ஓட்டலாமென்று..." என்பார் முன் பல் வரிசை தெரிய சிரிப்போடு, ஒரு மாதம் முன்பு அவசர அவசரமாக கார் ஓட்ட கற்றுக்கொண்ட புதிதாக கல்யாணமானவர்,

'மனைவி சனிக்கிழமையும் அரை நாள் அலுவலகம் சென்றிருந்தாள்., ஏதோ ஆடிட்டிங் என்று, குழந்தைகளை நான் தான் கவனித்துக்கொண்டிருந்தேன்.. மதியம் என் அம்மாவை medical check-up   கூட்டிச்சென்றேன்.. மனைவி குழந்தைகளோடு ஞாயிறு மாலை சினிமா, ஹோட்டலில் இரவு உணவு...' என்பார் கூட்டுக்குடும்ப நடுத்தர வயதுக்காரர்,

'திங்கட்கிழமை-யின் மீட்டிங்கிற்கு சனிக்கிழமை ஒத்திகை என்று சொல்லி நாள் முழுக்க போனை கட்டி அழ வேண்டியதாகிற்று' இது அலுவலக அதிகார மேல் வர்க்கத்தின் வழக்கமான புலம்பல்...


ஏன் கசக்கிறது திங்கட்கிழமையென்றால்....!?
இது தானே உங்கள் சந்தேகம்...

திங்கட்கிழமை வந்து செய்து கொள்ளலாம் என்று விட்டுவைத்திருந்த, போன வார வேலைகளெல்லாம் விக்ரமாதித்தன் முதுகில் மறுபடியும் ஏறிக்கொள்ள காத்திருக்கும் வேதாளமாக தோன்றும்.

கடந்த வாரம்., வெள்ளிக்கிழமை காலையிலேயே, செய்து முடிக்கவேண்டிய  வேலைகளை முடித்து விட்டிருந்தாலும், "வேலையை முடித்துவிட்டேன்..." என்று உடனே பொத்தான்களை தட்டி தண்டோரா போடாமல்(வேறென்ன., வார கடைசி நாளில், நானூற்றி முப்பதி ஆறாவது வரியில் தவறு இருக்கிறது பார், புள்ளி சரியாக வை என்று... குறைகள் கூறும் மேலதிகாரியின் வேலைப்பளு தாங்க பயந்துதான்...)., சாயங்காலம் ஆறு மணிவரை காத்திருந்து, வீட்டுக்கு கிளம்பும்போது அவசராவசரமாக அரையும்குறையுமாக மேலதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டு சென்ற மின்னஞ்சல்களின்  'பிற்ப்பகல் பலன்கள்' கண்டிப்பாக சிம்மசொப்பனமாக காத்திருக்கும்.

முதுகெலும்பு அடுத்த ஐந்து நாட்களுக்கு கற்சிற்ப்பமாகி விடும்...
அமரும் நாற்காலிகளின் மேலுள்ள செயற்கை பஞ்சின் வெப்பம், உடல் சூட்டை அதிகமாக்கி.. மூளையை கரைக்க ஆரம்பிக்கும்..
தாயின் தாலாட்டு பாடல்களை எளிதில் தோற்க்கடிக்கும் கலந்துரையாடல்கள்(!)...
இன்னும் எத்துனையோ காரணங்களுண்டு..

மறுபடியும் வெள்ளிக்கிழமை வருவதற்கு இன்னும் எத்துனை நாட்கள் இருக்கிறது என்று விரல் விட்டு எண்ணிக்கொண்டு இருப்போரை திங்களன்று பெருவாரியாக காணலாம்.

சில முற்போக்கு சிந்தனையாளர்கள்(!)  "எந்த பைத்தியக்காரன் வடிவமைத்தது இந்த வார நாட்கள் இப்படி அமைய வேண்டுமென்று ?",
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் "ஏழு நாட்கள் தான் ஒரு மாதம் என்றிருந்திருந்தால், இந்நேரம் மாதம் நான்கு முறை சம்பளம் வாங்கலாம்" என்றெல்லாம் தீவிர உரையாடல்களோடு திங்கட்கிழமை-ஜுரத்தை போக்கிக் கொண்டிருப்பார்கள்.

திங்கட்கிழமை தான் பலருக்கு புரியும் 'காலத்தில் பின்னோக்கி பயணிக்கும்  இயந்திரம்' கண்டுபிடிக்கப்படவேண்டியதன் அவசியம்.

நாட்கள் வெள்ளிக்கிழமை நோக்கி நகர ஆரம்பிப்பது, முதல் நாள்-முதல் காட்சி சூப்பர் ஸ்டார் படத்தின்  டிக்கெட் வரிசையில் முன்னேறும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி ஆரவாரம் தான் எங்கள் எல்லோர் மனதிலும் ஒவ்வொரு வாரமும்...

இந்த திங்கட்கிழமை-ஜுரம் என்பது நாடுகளையும், கண்டங்களையும் மொத்தத்தில் எல்லைகளை தாண்டியது என்று மிகவும் உறுதியாக கூறுவேன் நான்.

பெரும்பாலான மேலைநாடுகளில், வார நாட்களில் எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை  செய்தாலோ, விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து வேலை செய்தாலோ, மேலதிகாரிகளுக்கு தக்க விளக்கமளிக்க நேரிடும். 
காரணம், வேலையை செய்து முடிக்க வேண்டிய நேரத்தில் முடிக்காதது திறனற்ற வேலையாளின் அடையாளமென்பதால்.
நம் ஊரில் இந்த விதி தலைகீழ். ஏன் அப்படி என்ற விவாதம் ஆரம்பித்தால், அது இன்னும் பதினைந்து வலைப்பதிவுகள் நீளும்...

இங்கு(அமெரிக்கா-வில்) சனி/ஞாயிறு என்பது முழு சுதந்திர தினங்கள் தான்.
கைபேசிகளும், அலுவலக மடிக்கணிணிகளும், மின்னஞ்சல்களை சட்டைப்பைகளுக்கு கொண்டு தரும் Blackberry களும் சற்றே இளைப்பாறும்.

இங்கு வாழும் மக்கள் இந்த நாட்களை கழிக்க, அருகாமை கடல் பயணங்கள், கேளிக்கை பூங்காக்கள், சினிமா, சுற்றுலாத்தலங்கள், தொலை தூர கார் பயணம், விளையாட்டு நிகழ்ச்சிகள், TV என்று பொழுதுபோக்கிறார்கள்.

இந்த பொழுதுபோக்குகளை சுற்றி தான் இருக்கிறது இந்த ஊர் 'திங்கட்கிழமை உரையாடல்கள்'
அப்படி ஆரம்பித்த ஒரு உரையாடலில், ஒரு அமெரிக்க நண்பர்.. தான் சமீபத்தில் பார்த்த ஆங்கில பாப் பாடலொன்றில் கணிணி உத்திகள் கொண்டு இருபது பேருக்கு மேல் ஒரே மாதிரி Sync-dance ஆடியதை பார்த்து வியந்ததாக கூறிக்கொண்டிருந்தார். அதை மெச்சி தலையசைத்தனர் அருகிலிருந்த சக அமெரிக்க நண்பர்களும்...

சிறிது நேரம் யோசித்துவிட்டு, நம் ஊர் "மதுரைக்கு போகாதடி..." பாடலை காட்டினேன் அவரிடம்...
பாடலை பார்க்க ஆரம்பித்தபோது, ஆச்சர்யத்தில் அவர் திறந்த வாயை மூட வெகு நேரம் ஆனது...
இதெல்லாம் நாங்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே 'சந்திரலேக்கா' என்றொரு படத்தில் ஒரே பாடலில் ஆயிரம் நடன கலைஞர்கள் கொண்டு சாதித்து விட்டோமென்று பெருமையடிதுக்கொண்டேன் அவரிடம்..

அட!! எவ்ளவோ செய்துட்டோம், இதை செய்யமாட்டோமா !!

சந்திப்போம்....N