Friday, April 23, 2010

கள்ள விழிகளில்

நடுஜாமத்தில் தட்டி எழுப்பி என் இரு கண்களையும் ஒரு கருப்புத்துணியால் மறைத்து கட்டிவிட்டு செய்யச்சொன்னால் நான் 100% சரியாக செய்யக்கூடிய காரியங்களில் சில.,
- எந்த ஒரு கணிணியையும்(மேசைக் கணிணி/மடிக் கணிணி) அதிகபட்சம் ஒரு திருபுளியை மட்டும் கொண்டு, அதன் கடைசி பாகம் வரை பிரித்துவிட்டு மறுபடியும் அது முழுமையாக செயல்படும் விதம் மீண்டும் சேர்ப்பது.
- ஒரு கணிணியின் செயல்திறன் அறிந்ததும், அதற்க்கு தேவையான மென்பொருள் நிறுவ எந்த நிமிடத்தில் எந்த எந்தெந்த பொத்தான்களை அழுத்தி அதை முழுவதும் செயல் பெறவைக்க முடியுமென்பது.
- எனக்கு வேலை செய்ய ஒதுக்கப்பட்ட எந்த கணிணியிலும், ON என்ற பொத்தானை அழுத்தியதிலிருந்து எவ்வளவு நேரத்தில் அது என் காவற்ச்சொல்லை வினவும் என்பதறிந்து அதன் பசியாற்றி பின்னர் என் தினசரி அலுவலுக்கு தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் திறந்துவைப்பது.
- நான் அனுப்ப நினைக்கும் குறுந்தகவலை என் கைப்பேசியிலிருந்து எந்த தவறுமின்றி தட்டச்சு செய்து குறிப்பிட்டவருக்கு அனுப்புவது.
- தொலைப்பேசியின் மறுமுனையில் இருப்பவருடைய கணிணிக்கோளாறை, அவர் சொல் மட்டும் கேட்டு எந்த திரையையும் பாராமல், எந்த புத்தகத்தையும் வினவாமல் சரி செய்வது.
- கணிதத்தில் pi -யின் மதிப்பீடு என்னவென்று இருபத்திஐந்தாம் தசமம் வரை கூறுவது.
- குறைந்தபட்சம் அரை மைல் தூரமாவது ஒரு நேர் கோட்டில் நீந்திச்செல்வது.
- நிமிடத்திற்கு 55 வார்த்தைகள் வீதம் தட்டச்சு.

விட்டால் இன்னும் நீளும் இந்த பட்டியல்....
இங்கு 'பட்டியலிடக்கூடயவை(அல்லது பட்டியலிட வேண்டியவை!) எத்துனை' என்ற கேள்விகள் எழும் நிச்சயம்.. ஆதலால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...!

"என்ன ஆச்சு உனக்கு !? "
"என் இந்த அர்த்தமற்ற பட்டியல் திடீரென்று ?"
உங்கள் நெற்றிச்சுருக்கங்களின் அர்த்தம் புரிகிறது எனக்கு.

அதெல்லாமிருக்கட்டும்., எனக்கு இன்னும் இரண்டு கண்களும் காதுகளும்(முகத்தில் எங்காவது) இறைவன் வரமளித்தாலும் கூட, கண்டிப்பாக நான் கோட்டை விடப்போகும் விஷயம்... இதோ...
- உப்பு..... ருசிக்கு..
- மஞ்சள் தூள்.... நிறத்திற்க்காக...
- மிளகாய்த்தூள்... காரத்திற்கேற்ப்ப...
- கடுகு.. சிறிதளவு...
- நறுக்கிய வெங்காயம்.... சாம்பார் அளவிற்கேற்ப்ப...
- நறுக்கிய தக்காளி.... வெங்காயத்தின் அளவிற்கேற்ப்ப...
- நன்கு தட்டிய பூண்டு....  அதுவும் சிறிதளவு(!)....
- புளி... ஒரு எலுமிச்சை பழ அளவு..
- தண்ணீர்... தேவைக்கேற்ப்ப...

ஆம்...!
உங்கள் கணிப்பு சரியே... சமையல்.

மேற்க்கண்ட(மாதிரி!) சமையல் குறிப்புகளை.,
கசக்கி தூக்கியெறியும் முன்பு நோட்டம் விடும் வேர்க்கடலை மடிக்கப்பட்ட நாழிதளின் தாளிலோ,
டீ கடையில் பஜ்ஜி மடித்துத்தரப்படும் தினசரியிலோ,
ஆர்வமின்றி புரட்டும் ஏதோ ஒரு வார இதழிலோ,
நண்பனின் தொலைபேசி எண் குறிக்கும் பொது தென்படும் அம்மாவின் சமையல் குறிப்பு நோட்டிலோ,
தொலைக்காட்சியில் வேறு அலைவரிசை மாற்றும் போது தென்படும் 'சமைத்துப்பார்' நிகழ்ச்சியிலோ  நாம் அனைவரும் கண்டிப்பாக எங்காவது ஒரு நாள் காணப்பெற்றிருப்போம்...

நானும் உங்களில் ஒருவனாகத்தான் இருந்தேன், சமைக்கும் கட்டாயம் நேரும் வரை(பெண் வாசகிகள் கோபம் கொள்ள வேண்டாம்...).
நான் இங்கு(சிகாகோ) வந்ததிலிருந்து, இதைப்போன்ற சமையல் குறிப்புகள் தான் எனக்கு படியளந்து கொண்டிருக்கின்றன..
காரணம்., புர்ரிட்டோ, கோர்டிடாஸ், கியேசடியா, நாக்கோஸ், டோர்டாடாஸ், குங்பாவ் சிக்கன், ஹநி வால்நெட் ஷ்ரிம்ப், சளுபாஸ், லான்குவா....(கவலை வேண்டாம், எத்துனை முறை படித்தாலும் வாயில் நுழையாத, புரியாத, அர்த்தம் விளங்காத பெயர்கள்தான் இவையெல்லாம்....) என இன்னும் பல என்று ஊர் பேர் தெரியாத உப்பு சப்பு காரமற்ற உணவுகளால் செத்து மடிய தயாராக இருக்கும் என் நாக்கு..!

நான் இங்கு வந்து சில வாரங்களில், கார உணவு வகைகள் உண்ண முடிவதில்லை என்று புலம்புவதை கேட்ட என் அமெரிக்க நண்பர்களிலொருவர்.,
"குமரன், கவலை வேண்டாம். நம் அலுவலகத்திலிருந்து  வெகு அருகாமையில் ஒரு ஹோட்டல் உண்டு, அங்கு நான் உன்னை கூட்டிச்செல்கிறேன். அவர்கள் தயார் செய்யும் சில உணவுவகைகளில், காரமென்றால் அப்படி ஒரு காரம்.
நான் ஒரு முறை தெரியாமல் அங்கு உண்டுவிட்டு, என் நாக்கின் சுவையறியும் செல்களில் ஒரு பெரும் பகுதியை பறிகொடுத்தேன்" என்றார்.

'அடடா வெள்ளையனே... பாலை வார்த்தாயடா  என் வயிற்றில். பாடிகாட் முனீஸ்வரன் துணை இருக்கட்டும் உன்னுடன்....' என்று மனதில் கூறிக்கொண்டு குஷியோடு சென்று சேர்ந்தேன் அந்த ஹோட்டலுக்கு அவரோடு.

உணவு வகைகளை ஒவ்வொன்றாக பரிமாறவும் செய்தார்கள், நாங்கள் சாப்பிட ஆரம்பித்து இருபது நிமிடங்களுக்கு மேலாகியிருந்தது.
பொறுமையிழந்த நான், "நீங்கள் கூறிய அந்த கார சார உணவுகளை கொண்டு வரச்சொலுங்களேன்....வந்ததே அதற்குத்தானே" என்றேன் அவரிடம்...

"நான் சொன்ன அந்த அதிபயங்கர கார சார உணவு வகைகளெல்லாம் நீ சாப்பிட்டு முடித்து வெகு நேரமாகிவிட்டது, என்னால் தான் காரம் தாங்க முடியவில்லை" என்றார் கோவைப்பழ நிறத்தில் முகம் சிவந்து போய், கண்களிலும் மூக்கிலும் நீர்(!) வடிய..
"அட கடவுளே.... நான் சாதாரணமாக உண்ணும் காரத்தில் ஐம்பதில் ஒரு பங்கு கூட இல்லையே இது..." என்றேன் சிரிப்போடு...
"நீ இந்த உணவை வகைகளை உண்ணும்போதே ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது என்னால்" என்றார் அவர்.
"கார சார உணவு வகைகளை உண்பதென்பது எங்களுக்கு தாய்ப்பாலை போல" என்றேன் அவரிடம்.

பொதுவாக நான் காலையில் அலுவலகம் கிளம்பிச்செல்லும் அவசரத்திற்கு கை கொடுப்பது கண்டிப்பாக பாலும் Kellogg's-ம் மட்டும்தான்.
மதிய உணவிற்கு, சற்றுமுன் மேலே கூறிய(பெயர் விளங்காத) உணவுப்பட்டியலில் ஏதோ ஒன்றை உண்டு பசியாற வேண்டியது...
இரவிலும், சனி/ஞாயிறுகளில் மட்டும், என் நாக்கு இன்னும் விரக்தியில் செத்து மடிந்துவிடவில்லை என்பதை நினைவிலிருத்திக்கொள்ள நம் ஊர் சாம்பார், ரசம், பொறியல், கூட்டு என்று சமயலறையில் புகுந்து ஆய்வுகள் செய்யவேண்டுயுள்ளது.

  • வெங்காயம் நறுக்கும் போதுதான் உண்மையில் புரிகிறது ஏழாம் வகுப்பு  இரசாயனவியல் பாடம், Syn-Propanethial-S-Oxide கண்களுக்கு என்ன செய்யுமென்று.
  • தண்ணீரின் கொதிநிலை அளவும், குக்கரின் விசில் சப்தமும் ஏன் என்று  புரிகிறது இப்போது.
  • தக்காளியை எந்த வாக்கில் வெட்டுவது அதை பொடியாக நறுக்க.
  • கடுகுக்கும் எண்ணெய்க்கும் இடையில் நடக்கும் போரில் என் கையில் குண்டுகள் பட்டுவிடுவதை யாரிடம் முறையிடுவேன்.
  • 'அடி பிடித்துவிடும்' என்று சொல்லுவதன் சாராம்சம் என்னவென்று தெரிந்தது., நான் சமைத்த சாம்பார் சட்டியை விட்டு வர மறுத்த தினத்தன்று.
  • 'தேவைக்கேற்ப' என்ற வார்த்தை இன்றுவரை எனக்கு புரிந்ததாக தெரியவில்லை.
ஆய்வுகள் என்றதுமே புரிந்திருக்கும் உங்களுக்கு, ஆம்! சமையலுக்கு முக்கிய தேவை... அந்த உணவை வைத்து சோதனை செய்ய ஒரு ஜீவன்(!).

இதையெல்லாம் மீறி, குறிப்புகளை படித்து சமையல் செய்வது அலுத்துப்போய்... 
'நாமே ஏதாவது செய்தாலென்ன...?' என்று ஆரம்பித்து... 
முடிவில் சமையல் நன்கறிந்த நண்ப/நண்பிகள் "என்ன சமைத்தீர்கள்?" என்ற கேள்விக்கு "Carrot சாம்பார், கத்தரிக்காய் ரசம், கொத்தமல்லி கூட்டு, கருவேப்பிலை குழம்பு...." என்று நான் ஏடாகூடமாக பதிலளித்தது ஒன்றிரண்டு முறையல்ல(!).

'சமையல் தானே.. அதற்க்கு ஏன் இவ்வளவு புலம்பல்...?'
பதில் இருக்கிறது அதற்கும்.
பள்ளி முடியும் வரை அம்மாவின் அரவணைப்பில்...
கல்லூரி வாழ்க்கை பெரும்பாலும் மெஸ் சாப்பாடு...
வேலைக்கு சேர்ந்த பின்னர் முப்பொழுதும் அலுவலக காண்டீன் சாப்பாடு இல்லையேல் ஹோட்டல் உணவு... 

கணிசமான வருடங்கள் ஓடி தீர்ந்துவிட்டன நான் முதன்முதலாக சமைக்க ஆரம்பித்த சமயம்.
என்னிடம் யோசனை கேட்டால், சட்டென்று கூறிவிடுவேன் தயங்காமல்... 'பள்ளியிலோ கல்லூரியிலோ., ஆண்களுக்கு மட்டும் அடிப்படை சமைக்கும் திறன்களை பரிட்சையில்லா பாடமாகும்படி...'

'ஆண்களுக்கு மட்டும்' என்று கூறியது., 'சமையலறை பெண்களின் பிறப்புரிமை' என்று கூச்சலிடும் கூட்டத்தை சேர்ந்தவன் நான் என்பதால் அல்ல.
சமையல் கலையென்பது பெண்களின் உயிரணுக்களில்., பொறுமை, சகிப்புத்தன்மை, ருசியுணர்வு... இன்னும் இது போன்ற பல மென் குணங்களோடு ஏற்கனவே இருக்கும் ஒரு அங்கம். 

"பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை.... சந்தோஷ சங்கீதம்..." என்ற வைரமுத்துவின் பாடல் வரியில், வாழ்வின் துளிகள் தான் எத்துனை.

சிந்திப்போம்...N

Friday, April 16, 2010

அங்காடித்தெரு

நாம் தினமும் பார்க்கும் இடங்கள், அதில் உலாவும் மனிதர்கள், 
நம் பொழுதை கழிக்கவும், பண்டிகைக்கால புதுத்துணிகள் வாங்கவும் பளிங்கு தரையில் உலாவி, பொம்மை கட்டியிருக்கும் புடவையை நோட்டம் விட்டு, இலவச குளிர்பானங்கள் குடித்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் ரெங்கநாதன் தெரு கடைகளில் வேலைப்பார்பவர்களையும் அவர்களது வாழ்க்கை அவலங்களையும் யதார்த்தம் குறையாமல் கேமரா முன் கொண்டு வந்து., நம்மை 'அட!' போட வைத்து கண்களையும் ஈரமாக்கி விட... இதோ... "அங்காடித்தெரு"

அரசியல் வாக்குவாதங்கள், சுவிட்சர்லாந்தில் பாடல், லஞ்ச ஒழிப்பைப்பற்றிய பிரச்சாரம், குத்து பாடல்கள், ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் கதாநாயகன், கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் வந்து தாதாக்களை பந்தாடும் இளைஞன், தொப்புள் தெரிய நடனம்,  நுனி நாக்கு ஆங்கிலத்தில் பத்தி பத்தியாக வசனங்கள்.. இவை ஏதுமில்லால் வெற்றிப்படம் தர முடியுமென்பதை கண் முன் காட்டியிருக்கிறது அங்காடித்தெரு.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றாலும், தந்தையை விபத்தில் பறிகொடுத்து விட்டு வறுமையில் வாடும் குடும்பத்தையும், கடன்களையும் அடைக்க திருநெல்வேலியிலிருந்து சென்னை ரெங்கநாதன் தெரு 'செந்தில் முருகன் ஸ்டோர்' க்கு வேலைக்கு வருகிறார் லிங்கு(மகேஷ் : அறிமுகம்).
மூச்சு விடவும் நேரம் குடுக்காமல், கண்கொத்திப்பாம்பாக நோட்டம் விட்டு அடி உதை குடுத்து நெஞ்சில் பயம் விதைக்க முதலாளியிடம் சம்பளம் வாங்கும் மேற்ப்பார்வையாளர்கள், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் சம்பளம் குறைத்துவிட வடிவமைக்கப்பட்ட இயந்திரம், எந்த வேலை சொன்னாலும் 'முடியாது' என்று சொல்லாமல் செய்ய வேண்டிய கட்டாயம், நான்கு பேர் நிற்கும் இடத்தில் இருநூறு பேர் தோளோடு உறங்கும் அவலம், தனக்கு முன் உண்பவர் தரும் தட்டிற்க்கு காத்திருந்து உணவு உண்ண வேண்டிய நிர்பந்தம் என்று எல்லா வேதனைகளையும் தாங்கி வாடிக்கையாளர்களிடம் புன்னகையை மட்டும் உமிழப்பழகவேண்டிய சேல்ஸ் வேலை.
"பசியுற்ற முதலைகள் இருக்கும் கிணற்றில் விழாமலிருக்க, சீரும் மலைப்பாம்பின் வாலைப்பிடித்து தொங்கும் தருணத்தில் உயர்ந்த மரக்கிளையிலிருந்து நாக்கில் சொட்டும் தேனை" போல் ஆறுதலாக லிங்குவிற்கு அறிமுகமாகிறார் உடன் வேலை புரியும் கனி(அஞ்சலி)
நாட்கள் நகர ஆரம்பிக்க, கனியுடம் ஆரம்பித்த 'மோதல் அறிமுகம்' நட்பாகி... காதல் மலர்கிறது. காதலை ஏற்க மறுக்கிறது அவர்கள் உலகம்.
தங்கள் காதலை ஜெயிக்கவைக்க போராடும் இவர்களுக்கு வழி விட்டதா அங்காடித்தெரு என்பதை நிஜ வாழ்க்கையின் இலக்கணங்கள் மாறாமல் தருகிறது மீதிக்கதை.

 அழுக்கு படிந்த ரெங்கநாதன் தெரு, சேல்ஸ் வேலை செய்யும் நபர் என்று எவரும் அடையாளம் காட்டும் ஆடைகளோடு கதாபாத்திரங்கள் இத்தோடு மட்டும் கதையை நகர்த்திச்சென்ற டைரக்டர் வசந்தபாலனின் நம்பிக்கை படம் முழுக்க மிளிர்கிறது.

மகேஷ்., ரப்பர் பந்து கிரிக்கெட் விளையாடும் கிராமத்து இளைஞனாக, 
'நான் பன்னன்டாவதுல ஆயிரத்து நூத்தி இருபத்தி எட்டு மார்க்கு அண்ணே.. இந்நேரம் இன்ஜினியரிங் படிசிட்டுருக்கணும்' என்று கொதிக்கும் போது, தன் வேலை பறிபோய்விடும் பயத்தில் 'மன்னிச்சிருங்க அண்ணாச்சி' என்று கதறும் போது, 'இனிமே உன் முன்னாடி வந்து நின்னா பிஞ்ச செருப்பால அடி' என்று காதலியிடம் கோபம் கொள்ளும்போதும் அறிமுக நாயகன் என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அகற்றிவிடுகிறார். படம் முழுக்க 'பலே' சொல்ல வைக்கிறது அவரது நடிப்பு..
'கற்றது தமிழ்' அஞ்சலி., நடிப்பில் போதுமான அளவு முதிர்ச்சி. துருதுரு கண்களுடன் காதலனை பார்ப்பதிலும், 'வேறென்ன நான் பத்தாங்கிளாஸ் பெயில் ஆகிட்டேன், அவன் பாஸ் ஆகிட்டான்' என்று யதார்த்த வசனம் பேசும்போதும்,  'மாரைப் பிடிச்சு கசக்கினான்... பேசாம நின்னேன்!' என்று மகேஷிடம் வெடித்துவிட்டு, 'இதே டிசைன்ல மெரூன் கலரா?... இருக்குக்கா...' என்று கண்ணீரை துடைத்துக்கொள்ளும் போதும்.... என்று படம் முழுக்க நம்மை பெரிதும் நெகிழ வைக்கிறார்.

படம் முழுக்க சரவெடியாய் 'கனா காணும் காலங்கள்' புகழ் பாண்டி.
'எப்ப பார்த்தாலும் பக்கத்துக்கு வீட்டு பிள்ள மாதிரி வருமா வருமான்னு கேட்டல்லயா.... இப்ப நான் அந்த புள்ளைய விட மார்க்கு கூட..' என்று தந்தைக்கு விளக்கம் கூறும் போதும், 'மாரிமுத்து மெட்ராஸ் போறேன்டி, சிநேகா அக்கா ஊரு' என்று சிலுப்பும்போது,
'சேமியா ன்னு ஒரு பேரா!?' என்று காதல் வயப்படும் பொது, 'மாப்ள, எங்க அப்பன் சொல்லி கூட நான் கேட்கலடா.. உனக்காக தான் இங்க வந்தேன்' என்று கண்ணீர் மல்கும்போது என உண்மையில் கலக்கியிருக்கிறார்.

பேப்பர் பொறுக்கும் முஸ்லிம் பெரியவர், செருப்பு அணியாத முதலாளி அண்ணாச்சி, நெற்றி நிறைய குங்குமத்தோடு பூ விற்கும் பெண்கள், ரிமோட் கவர் விற்கும் சிறுவர்கள், பார்வையற்ற நடைபாதை வியாபாரி,  அண்ணா/அக்கா என்று நம்மை அழைக்கும் சேல்ஸ் ஊழியர்கள், தொப்பையோடு டிராபிக் கான்ஸ்டபிள் , உடல் முழுக்க வாட்ச் கட்டிக்கொண்டு அதை வியாபாரம் செய்பவர், குள்ளரும் அவரது மனைவியும், காதலன் கூறிய வார்த்தை தாங்க முடியாமல் கோபம் கொப்பளிக்கும் கண்களோடு தற்கொலை செய்துக்கொள்ளும் செல்வராணி, வேலை தேடி கலைத்து இலவச கழிவறையை சுத்தம் செய்து அதற்கு பணம் வசூலிக்கும் உழைப்பை நம்பும் இளைஞன் என்று படம் நெடுக வரும் அன்றாட கதாபாத்திரங்கள் மேலும் அழகு.

கதாநாயகன் சென்னை வந்துவிட்டதை உணர்த்த சென்ட்ரல் ஸ்டேஷன் காண்பிப்பது தமிழ் சினிமாவிற்கு புளிக்கும் பழமாகிவிட்டது என்று நினைக்கிறேன்(!).. இனி கோயம்பேடு பஸ் நிலையம் கண்களுக்கு இதம் தரட்டும்.

"....கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என ஜெயமோகனின் வசனம், படத்திற்கு 'ஜே!' போட வைக்கிறது. 
ரிச்சர்ட் மரிய நாதனின் காமெராவிற்கு நிச்சயம் பெரும்பங்குண்டு. ரெங்கநாதன் தெருவில் புழுக்கத்தொடு நடமாடும் மனிதர்களாகட்டும், சேற்றில் விழும் strawberry பழமாகட்டும்.. படமாக்கியிருக்கும் விதம் கைதட்டளுக்குரியது.

'அவள் அப்படி ஒன்றும்', 'உன் பேரை சொல்லும்' பாடல்கள் மனதிற்கு தாலாட்டு.

'அட யாருபா இவன் !?' என்று சாமானியனையும் கேட்க வைக்கும் 'கருங்காலி' மேற்பாவையாளரின் நடிப்பு,  "இந்த பை கடைல தான் எங்க அண்ணன் மெட்ராஸ்ல வேலை செய்யுது, அந்த பைய தருவீங்களா?" என்று தங்கை பாசம், கிராமத்து மகேஷின் முதல் காதல் கதையில் சென்னைப் யுவதியாக வந்து 'Strawberry ஒரு பலம்' என்று தமிழ் பேசும் பெண்,  வர்ணப்போடிகளில் மறைந்து போகும் கோலமிடும் பெண்ணின் ரத்தக்கரை, மாமூல் கொடுப்பதை குறித்து வைத்துக்கொள்ளும் அண்ணாச்சி, தன் குழந்தை தன் கணவனைப்போலவே ஊனமுற்று உள்ளதென்பதை நினைத்து பூரிப்படையும் முன்னாள் பாலியல் தொழிலாளி, கொடூர விபத்தோடு ஆரம்பிக்கும் முதல் காட்சி என்று படம் முழுக்க நம்மை சலிப்பு தட்டாமல் நகர்த்திச்செல்லும் தருணங்கள் நிறைய...

நம்மிடையே நடக்கும் அவலங்கள் என்னவென்று தெரிய, கண்டிப்பாக அனைவரும் கடக்க வேண்டிய தெரு --- அங்காடித்தெரு.

சந்திப்போம்....N

Saturday, April 10, 2010

நீ

உன்னை
நினைத்து
கொண்டிருபதிலே
போய்
விடுகின்றன
என் எல்லா
நிமிடங்களும்...

Wednesday, April 7, 2010

விழியிலெல்லாம்...

திங்கட்கிழமை....
விரைவில் இந்த சொல்லை அதிகாரப்பூர்வமாக 'கொடும் வசைச்சொல்' என்று அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.
மென்பொருள்/கணிணியியல் சார்ந்த நிறுவனங்களில் இதன் வீரியம் கொஞ்சம் அதிகமென்றே கூறலாம்.

வெள்ளி இரவை கேளிக்கை இரவென்று ஆரம்பித்து... சனி, ஞாயிறு என இரண்டு நாட்களும் "இரவினில் ஆட்டம்.. பகலினில் தூக்கம்...இதுதான் எங்கள் உலகம்..." என்றிருந்துவிட்டு., திங்கட்கிழமை வேலைக்கு வரும் போதும் இருக்கும் மனநிலை... வாழ்கையில் முதன் முதலில் பள்ளி செல்லும் மூன்று வயது குழந்தையின் மனநிலையிலிருந்து  எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல..

திங்கள் காலை., "எப்படி இருந்தது உங்கள் சனி/ஞாயிறு ?" என்று நம் சிங்காரச்சென்னையில்  ஆரம்பிக்கும் உரையாடல்களை கேட்பதே எனக்கு ஒரு தனி சுவாரசியம்.....

'மகாபலிபுரம் சென்றிருந்தேன் bike-ல் கிழக்கு கடற்கரை சாலை வழியே என் நண்பியுடன், கடற்கரையில் கால் நனைத்துவிட்டு பல்லவ சிற்ப்பங்களின் கலை நுணுக்கத்தை ஆராய்ச்சி செய்தோம்(!!), வராக குகைக்ககோவிலின் தனிமை எங்களை ரொம்பவே ஈர்த்தது(!!!), திரும்ப வரும்போது Mayajaal-ல் சினிமாவிற்கு சென்றோம் இரவு வரை நேரம் கடத்த..' என்பான் ப்ளேபாய்  பிரம்மச்சாரி,

'பெரிதாக ஒன்றும் செய்யவில்லை பாஸ், உணவு - உறக்கம் - உணவு - உறக்கம்' என்று கழித்தேனென்பான்  சோம்பேறி பிரம்மச்சாரி,

'காரில் பயணித்தோம் நானும் நண்பர்களும் பாண்டிச்சேரி வரை, Old-Monk கையும் Napoleon-யும் சந்திக்க(!)... வரும்போது திண்டிவனம் வழியாக வந்தும் கூட மாமாவுக்கு மாமூல் அழ வேண்டியதாகிற்று... அத்தோடு சேர்த்து மொத்த செலவு இருபதாயிரம்..' என்பான் கேளிக்கை விரும்பி பிரம்மச்சாரி,

'நான் ஊரில் இல்லை சார், சொந்தஊருக்கு சென்றிருந்தேன்.. நேற்றிரவு வரும்போது Unreserved பெட்டியில் பயணிக்கவேண்டியதாயிற்று.. தூக்கமே இல்லை.." என்பான் வாராவாரம் ஊருக்கு செல்லும் தூரத்து வெளியூர் பிரம்மச்சாரி,

'என்ன....வழக்கம் போல் தான் மச்சி, நண்பர்கள் - வீட்டு வேலை - திநகர் ஈகிள் பார் - பெசன்ட் நகர் கடற்க்கரை - வீடு - உறக்கம்' என்பான் உள்ளூர் பிரம்மச்சாரி,

'...நானும் என் காதலனும் கபாலீஸ்வரரை தரிசிக்க சென்றிருந்தோம், அங்கிருந்து தி-நகர்.. ஏதோ காரணத்தால் என் ATM கார்டு திடீரென்று வேலை செய்யவில்லை(!).... பிறகென்ன, அவனது தங்க வர்ண கிரெடிட் கார்டின் காந்த பட்டையில் போதுமான அளவு கோடுகள் விழுந்திருக்கும் இந்நேரம்(!!).." என்பாள் "பொட்டு வைத்துக்கொள்ளாததை நாகரீகம் என்றெண்ணும்" ஜீன்ஸ் பாண்ட்  யுவதி,

'....சனிக்கிழமை காலை பத்து மணிக்கு எழுந்தேன், அன்று சாயந்திரம் கோவிலுக்கு சென்றோம் நானும் என் தோழியும்... ஞாயிறு மதியம் ஹாஸ்டலில் Chicken சமைத்தார்கள், மீத நேரம் TV பார்த்து பொழுதைப்போக்கினேன்....' என்பாள் கோழிப்பண்ணையில் வாழும் சக அலுவலக அழகி,

'Sathyam தியேட்டர்-ல் ஹிந்தி படம் பார்க்க சென்றிருந்தோம் நானும் என் தோழிகளும், அங்கிருந்து Spencer Plaza போய் கையில் இலவசமாக மருதாணி வரைந்து கொண்டு, அங்கு மொத்தம் எத்துனை மாடிப்படிகளென்று எண்ணிக்கொண்டு வந்தோம்' என்பாள் மூன்று மாதங்களுக்கு முன் தமிழகத்தின் தென்கோடியிலிருந்து சென்னை வந்து வேலையில் சேரும்போது எண்ணெய் வைத்து தலையை படிய சீவி நான்கு வர்ணங்களில் கண்ணாடி வளையல் அணிந்து வந்ததை இன்று மறந்தவிட்ட 'அருக்காணி பேத்தி',

'நானும் என் மனைவியும் காரில் சென்றோம் முட்டுக்காடு படகு குழாம் வரை.. இப்போ  கார் ஓட்ட நல்லா இருக்கு சார்.. போன வாரம் தான் மாமனார் ரேடியல் டயருக்கு மொய் அழுதார்.. அதான் கொஞ்ச தூரம் ஓட்டலாமென்று..." என்பார் முன் பல் வரிசை தெரிய சிரிப்போடு, ஒரு மாதம் முன்பு அவசர அவசரமாக கார் ஓட்ட கற்றுக்கொண்ட புதிதாக கல்யாணமானவர்,

'மனைவி சனிக்கிழமையும் அரை நாள் அலுவலகம் சென்றிருந்தாள்., ஏதோ ஆடிட்டிங் என்று, குழந்தைகளை நான் தான் கவனித்துக்கொண்டிருந்தேன்.. மதியம் என் அம்மாவை medical check-up   கூட்டிச்சென்றேன்.. மனைவி குழந்தைகளோடு ஞாயிறு மாலை சினிமா, ஹோட்டலில் இரவு உணவு...' என்பார் கூட்டுக்குடும்ப நடுத்தர வயதுக்காரர்,

'திங்கட்கிழமை-யின் மீட்டிங்கிற்கு சனிக்கிழமை ஒத்திகை என்று சொல்லி நாள் முழுக்க போனை கட்டி அழ வேண்டியதாகிற்று' இது அலுவலக அதிகார மேல் வர்க்கத்தின் வழக்கமான புலம்பல்...


ஏன் கசக்கிறது திங்கட்கிழமையென்றால்....!?
இது தானே உங்கள் சந்தேகம்...

திங்கட்கிழமை வந்து செய்து கொள்ளலாம் என்று விட்டுவைத்திருந்த, போன வார வேலைகளெல்லாம் விக்ரமாதித்தன் முதுகில் மறுபடியும் ஏறிக்கொள்ள காத்திருக்கும் வேதாளமாக தோன்றும்.

கடந்த வாரம்., வெள்ளிக்கிழமை காலையிலேயே, செய்து முடிக்கவேண்டிய  வேலைகளை முடித்து விட்டிருந்தாலும், "வேலையை முடித்துவிட்டேன்..." என்று உடனே பொத்தான்களை தட்டி தண்டோரா போடாமல்(வேறென்ன., வார கடைசி நாளில், நானூற்றி முப்பதி ஆறாவது வரியில் தவறு இருக்கிறது பார், புள்ளி சரியாக வை என்று... குறைகள் கூறும் மேலதிகாரியின் வேலைப்பளு தாங்க பயந்துதான்...)., சாயங்காலம் ஆறு மணிவரை காத்திருந்து, வீட்டுக்கு கிளம்பும்போது அவசராவசரமாக அரையும்குறையுமாக மேலதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டு சென்ற மின்னஞ்சல்களின்  'பிற்ப்பகல் பலன்கள்' கண்டிப்பாக சிம்மசொப்பனமாக காத்திருக்கும்.

முதுகெலும்பு அடுத்த ஐந்து நாட்களுக்கு கற்சிற்ப்பமாகி விடும்...
அமரும் நாற்காலிகளின் மேலுள்ள செயற்கை பஞ்சின் வெப்பம், உடல் சூட்டை அதிகமாக்கி.. மூளையை கரைக்க ஆரம்பிக்கும்..
தாயின் தாலாட்டு பாடல்களை எளிதில் தோற்க்கடிக்கும் கலந்துரையாடல்கள்(!)...
இன்னும் எத்துனையோ காரணங்களுண்டு..

மறுபடியும் வெள்ளிக்கிழமை வருவதற்கு இன்னும் எத்துனை நாட்கள் இருக்கிறது என்று விரல் விட்டு எண்ணிக்கொண்டு இருப்போரை திங்களன்று பெருவாரியாக காணலாம்.

சில முற்போக்கு சிந்தனையாளர்கள்(!)  "எந்த பைத்தியக்காரன் வடிவமைத்தது இந்த வார நாட்கள் இப்படி அமைய வேண்டுமென்று ?",
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் "ஏழு நாட்கள் தான் ஒரு மாதம் என்றிருந்திருந்தால், இந்நேரம் மாதம் நான்கு முறை சம்பளம் வாங்கலாம்" என்றெல்லாம் தீவிர உரையாடல்களோடு திங்கட்கிழமை-ஜுரத்தை போக்கிக் கொண்டிருப்பார்கள்.

திங்கட்கிழமை தான் பலருக்கு புரியும் 'காலத்தில் பின்னோக்கி பயணிக்கும்  இயந்திரம்' கண்டுபிடிக்கப்படவேண்டியதன் அவசியம்.

நாட்கள் வெள்ளிக்கிழமை நோக்கி நகர ஆரம்பிப்பது, முதல் நாள்-முதல் காட்சி சூப்பர் ஸ்டார் படத்தின்  டிக்கெட் வரிசையில் முன்னேறும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி ஆரவாரம் தான் எங்கள் எல்லோர் மனதிலும் ஒவ்வொரு வாரமும்...

இந்த திங்கட்கிழமை-ஜுரம் என்பது நாடுகளையும், கண்டங்களையும் மொத்தத்தில் எல்லைகளை தாண்டியது என்று மிகவும் உறுதியாக கூறுவேன் நான்.

பெரும்பாலான மேலைநாடுகளில், வார நாட்களில் எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை  செய்தாலோ, விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து வேலை செய்தாலோ, மேலதிகாரிகளுக்கு தக்க விளக்கமளிக்க நேரிடும். 
காரணம், வேலையை செய்து முடிக்க வேண்டிய நேரத்தில் முடிக்காதது திறனற்ற வேலையாளின் அடையாளமென்பதால்.
நம் ஊரில் இந்த விதி தலைகீழ். ஏன் அப்படி என்ற விவாதம் ஆரம்பித்தால், அது இன்னும் பதினைந்து வலைப்பதிவுகள் நீளும்...

இங்கு(அமெரிக்கா-வில்) சனி/ஞாயிறு என்பது முழு சுதந்திர தினங்கள் தான்.
கைபேசிகளும், அலுவலக மடிக்கணிணிகளும், மின்னஞ்சல்களை சட்டைப்பைகளுக்கு கொண்டு தரும் Blackberry களும் சற்றே இளைப்பாறும்.

இங்கு வாழும் மக்கள் இந்த நாட்களை கழிக்க, அருகாமை கடல் பயணங்கள், கேளிக்கை பூங்காக்கள், சினிமா, சுற்றுலாத்தலங்கள், தொலை தூர கார் பயணம், விளையாட்டு நிகழ்ச்சிகள், TV என்று பொழுதுபோக்கிறார்கள்.

இந்த பொழுதுபோக்குகளை சுற்றி தான் இருக்கிறது இந்த ஊர் 'திங்கட்கிழமை உரையாடல்கள்'
அப்படி ஆரம்பித்த ஒரு உரையாடலில், ஒரு அமெரிக்க நண்பர்.. தான் சமீபத்தில் பார்த்த ஆங்கில பாப் பாடலொன்றில் கணிணி உத்திகள் கொண்டு இருபது பேருக்கு மேல் ஒரே மாதிரி Sync-dance ஆடியதை பார்த்து வியந்ததாக கூறிக்கொண்டிருந்தார். அதை மெச்சி தலையசைத்தனர் அருகிலிருந்த சக அமெரிக்க நண்பர்களும்...

சிறிது நேரம் யோசித்துவிட்டு, நம் ஊர் "மதுரைக்கு போகாதடி..." பாடலை காட்டினேன் அவரிடம்...
பாடலை பார்க்க ஆரம்பித்தபோது, ஆச்சர்யத்தில் அவர் திறந்த வாயை மூட வெகு நேரம் ஆனது...
இதெல்லாம் நாங்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே 'சந்திரலேக்கா' என்றொரு படத்தில் ஒரே பாடலில் ஆயிரம் நடன கலைஞர்கள் கொண்டு சாதித்து விட்டோமென்று பெருமையடிதுக்கொண்டேன் அவரிடம்..

அட!! எவ்ளவோ செய்துட்டோம், இதை செய்யமாட்டோமா !!

சந்திப்போம்....N

Tuesday, April 6, 2010

தூரம்

பிரபஞ்சத்தின் ஓரம் தான்
தூரம் என்று நினைத்திருந்தேன் இன்று வரை..
பிரிவு தான் உண்மையில்
தூரமென்று உணர்த்திவிட்டது இந்த காதல்...

Monday, April 5, 2010

புயல்

நீ
என்னை
கடந்து சென்று
வெகு நேரமாகிவிட்டாலும்
இன்னும் என் மனதில்
புயலை வீசிக்கொண்டிருக்கிறது
உன் துப்பட்டா
கலைத்துச்சென்ற காற்று...

Friday, April 2, 2010

கரிகாலன் காலம் போல....

நேற்று இரவு எப்போது உறங்க ஆரம்பித்தேன் என்பது கொஞ்சமும் நினைவில் இல்லை..

".........வயலுக்கும், நரிகளிடமிருந்து கோழிகளையும் செம்மறி ஆடுகளையும் காக்க காவலாக வயலோரம் நான் கட்டிய சிறு கூடாரத்தில் அமர்ந்து தென்னை மரக்கீற்றுகளினூடே நிலவொளியை ரசித்துக்கொண்டிருந்தது மட்டும் தான் நினைவிலிருந்தது எனக்கு..

சேவல் கூவும் சப்தம் கேட்டு துயிலேளுகிறேன்...
கண்களை முழுதும் திறக்கவிடாது கூசும் சூரிய ஒளி...

கொட்டகையிலிருந்து வெளியே வந்ததுமே, என் வயலை ஒரு நோட்டம் விடுகிறேன்...
அட...! அறுவடைக்கு தயார் ஆகிவிட்டன பருத்தி செடிகள் எல்லாம்...
பருத்தி செடிகளுடன் சேர்த்து அறுவடை செய்துவிடலாமென்று நான் விட்டுவைத்திருந்த ஏற்கனவே விளைந்திருந்த கத்தரி செடிகளும் காற்றின் திசையில் சாய்ந்தாடிக்கொண்டிருந்தன...

அறுவடை செய்ய நான் தயார் ஆகும் முன், வயலின் மறுமுனையில் திரிந்தோடும் செம்மறி ஆடுகளை விரட்டிச்சென்று அதன் கொட்டகையில் அடைக்கிறேன்.
கோழிகளை அடைத்திருக்கும் கூண்டினுள் இருந்து, முட்டைகளை தேடி சேர்த்தாகிற்று...!

கன்று குட்டியை அதன் தாயிடம் கொண்டு சேர்த்துவிட்டேன்..!
ஒன்று 1000 ரூபாய் என்று சென்ற வாரம் வாங்கிய 30 வெள்ளை  பன்றிக்குட்டிகளையும் ஒரு நோட்டம் விட்டபடி வயலை சுற்றி வந்தேன். மூன்று வாரங்களுக்கு முன் நட்டுவைத்த Hybrid-ஆப்பிள் மரக்கன்றுகளும் காய்க்க ஆரம்பித்துவிட்டதை பார்த்து மகிழ்ந்தவண்ணம் நடை பயின்றேன்.

அறுவடை செய்யப்போகும் பருத்தி, கத்தரி மற்றும் இந்த ஆப்பிள் எல்லாவற்றையும் விற்று காசாக்கிவிடலாம்.
வயலில் பயன்படுத்தும் வண்டிகள் எல்லாவற்றுக்கும் போதுமான அளவு எரிபொருள் வாங்கலாம்.. மேலும் என் வயலை இன்னும் பெரிதாக்கிவிடலாம்.
அட! எத்துனை சிந்தனைகள் என்னுள்...

என் அறுவடை எந்திரத்தை உயிர்ப்பித்து என் வயலில் அறுவடையை தொடங்கினேன். அறுவடை செய்யும் பயிர்களுக்கு தகுந்தாற்போல் தன் அமைப்பை மாற்றி அறுவடையை விரைவாக்கிக் கொண்டிருந்தது அந்த இயந்திரம்.......பின்னணியில் 'கரிகாலன் காலம் போல..' பாடல் ஒலிக்க......"

"போதும் உன் கனவை பற்றிய பேத்தல்... நிறுத்திவிட்டு வேறு ஏதாவது எழுது பார்க்கலாம்..."
என்று உங்களில் பெரும்பாலானோர் முனகுவது கேட்கிறது எனக்கு.

இவை ஏதும் கனவல்ல அன்பர்களே !
நிஜமும் அல்ல....

"போதும் குழப்பியது..." என்கிறீர்களா ?
இவையாவும் இணையத்தில் கடந்த ஆண்டு சூடு பிடிக்க ஆரம்பித்த 'Social Gaming' வலைத்தளங்கள் பற்றி தான்.

இப்போது சட்டென்று புரிந்திருக்கும் சிலருக்கு நான் கூறுவது என்னவென்று.
ஆம் ! Farmville என்னும் Facebook பயன்படுத்துவோருக்கு பரிட்சயமான விளையாட்டு தான்.

இன்றைய iPod தலைமுறை விளையாடித்தீர்க்கும் இந்த விளையாட்டு, இணையத்தின் பயன்பாட்டிற்கு வந்தது சென்ற வருடம் ஜூன் மாதம்.

இன்று இதை உலகம் முழுவதும் விளையாடுவோர் எண்ணிக்கை 82 கோடிக்கும் மேல்.
இதற்க்கு இருக்கும் அதிகாரப்பூர்வ ரசிகர்கள் கூட்டம் 25 கோடிக்கும் மேல்.

இந்த Farmville-யை பற்றி மேலும் சில ஆச்சர்யமூட்டும் தகவல்கள்.,
1. இந்த விளையாட்டை உருவாக்கிய மார்க் என்பவர்  கூறுவது., இதை விளையாடுவோரை தோளோடுதோள் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தினால் அந்த வரிசை குமரி முதல் காஷ்மீர் வரை ஆறரை முறை வந்து சேருமாம்.
2. இந்த விளையாட்டில் இருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் இருக்கும் நிஜ விவசாயிகளின் எண்ணிக்கையை காட்டிலும் அறுபது மடங்கு அதிகமாம்.
3. இந்த விளையாட்டில் ஒரு நாளைக்கு மட்டும் வாங்கப்படும் tracktor-களின் எண்ணிக்கை ஐந்து லட்சம். John Deere என்ற அமெரிக்காவின் முன்னணி நிஜ tracktor-கள் தயாரிக்கும் நிறுவனம் ஒரு வருடத்திற்கு விற்கும் tracktor-களின் எண்ணிக்கை வெறும் ஐந்தாயிரம்.
4. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மட்டும், ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் வரும் இந்த விளையாட்டிலிருந்து என்று கணித்திருக்கிறார்கள் இந்த விளையாட்டை சொந்தம்கொண்டிருக்கும் zynga நிறுவனத்தைச்சேர்ந்த நிபுணர்கள்.

என்னதான் இருக்கிறது இந்த விளையாட்டில் என்கிறீர்களா..!?
நீங்கள் இந்த விளையாட்டில் எப்படி தோன்ற வேண்டுமென்று நீங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.
விதைகள் வாங்க பணம் சேர்க்க வேண்டும்.
விதைகளை விதைத்ததும் உடனே விளைந்துவிடாது பயிர்கள், அவற்றுக்கு நீரூற்றி பாதுகாத்து நாட்கள் கழிந்த பின்னர் தான் அறுவடை செய்ய முடியும்.
உங்களுடன் சேர்ந்து விவசாயம் செய்யப்போவது யார் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்(!).
உங்கள் பக்கத்துக்கு வயலில் விவசாயம் செய்யப்போவது யார் என்றும்...
உங்கள் நண்பர்களின் வயலுக்கு உரம் போட்டு கைமாறாக எரிபொருள் பெறலாம். இன்னும் எத்துனையோ சொல்லிக்கொண்டே போகலாம்(!!).

மேலும் ஒரு படி மேலே போய், இந்த விளையாட்டை எப்படியெல்லாம் நேர்த்தியாக விளையாடலாம் என்பதற்கு துணுக்குகள் தரவும் நிறைய வலைதளங்களும் உள்ளன.

ரசிகர்கள் இருப்பது போல் இந்த விளையாட்டை எதிர்ப்பதற்க்கும் நிறைய குழுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த விளையாட்டை பணம் கொண்டு விளையாடுவோரும் நிறைய.

மொத்தத்தில் நட்புறவை மேம்படுத்தி, மனஅழுத்தத்தை குறைப்பதாக நம்புகிறது இதை விளையாடுவோர் சமூகம்.

எது எப்படி இருந்தாலும், "நீ எதிர்காலத்தில் மாடு/பன்றி மேய்க்கக்கூட லாயக்கு இல்லை... என்று பள்ளி நாட்களில் ஆசிரியர்களிடம் நான் வாங்கிய திட்டுகளை பொய்யாக்கிவிட்டேன்" என்று பெருமை கொள்கிறார்கள் என் நண்பர்களில் பலர்..

சந்திப்போம்....N